அமெரிக்க எண்ணெய் பொருட்களுக்காக இந்திய சந்தையை திறக்க வேண்டும் என, புதிய தூதரக ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் வலியுறுத்தியுள்ளார்.
India Us Trade: மோடியும் ட்ரம்பும் ஆழ்ந்த நட்புறவை கொண்டிருப்பதாக, செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
”இந்திய சந்தையை திறந்துவிடுங்க”
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வலியுறுத்தி, இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவிகிதம் வரி விதித்துள்ளது. இதுபோக, இந்தியா மீது 100 சதவிகித வரி விதிக்க ஐரோப்பிய நாடுகளை ட்ரம்ப் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தாமதமாகியுள்ளதோடு, உறவிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை தொடர்பாக, இந்தியாவிற்கான புதிய தூதராக அதிபர் ட்ரம்பால் பரிந்துரைக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி, அமெரிக்காவின் கச்சா எண்ணெய் பொருட்களுக்கு இந்தியா தனது சந்தையை திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
”தெளிவாக சொன்ன ட்ரம்ப்”
இதுதொடர்பாக பேசுகையில், “வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்தியா உடன் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எல்என்ஜிக்கு அந்நாட்டின் சந்தையை திறந்துவிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். நடுத்தர மக்கள் நிறைந்த இந்தியா போன்ற சந்தைக்கு விரிவுபடுத்திக் கொள்ள எங்களிடம் பல வாய்ப்புகள் உள்ளன. அதை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். ரஷ்யாவிட்ம இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்பதை ட்ரம்ப் தெளிவாக வலியுறுத்தியுள்ளார்” என்றும் செர்ஜியோ பேசியுள்ளார்.
மோடி உடன் ஆழமான நட்பு
மேலும், “அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் செயல்பாடுகளை விமர்சித்து வந்தாலும், பிரதமர் மோடியைப் பாராட்ட அவர் தனது வழியை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் நம்பமுடியாத ஆழமான உறவைக் கொண்டுள்ளனர்” என விளக்கினார். வர்த்தகத்தைப் பொறுத்தவரை, இந்தியாவும் அமெரிக்காவும் வரிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டுவதில் வெகு தொலைவில் இல்லை என்று கோர் தெளிவுபடுத்தினார். ரஷ்ய எரிசக்தி கொள்முதல்களைத் தொடர்வதற்கு இந்தியா மற்றும் சீனா மீது கடுமையான நடவடிக்கைகளை விதிக்க டிரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தினாலும், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரிகள் குறித்த தீர்மானத்தின் மீது சில வாரங்களில் முடிவு எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தியா உடனான உறவு:
இருநாடுகளுக்கு இடையேயான உறவு குறித்து பேசுகையில், “இந்திய அரசாங்கத்துடனும் இந்திய மக்களுடனும் அமெரிக்காவின் உறவு பல தசாப்தங்களாக நீண்டுள்ளது. இது சீனர்களுடன் அவர்கள் கொண்ட உறவை விட மிகவும் அன்பான உறவாகும். இந்தியா நமது பக்கம் இழுக்கப்பட்டு சீனாவிடமிருந்து விலகி இருப்பதை நாங்கள் முதன்மையான முன்னுரிமையாகக் கருதுவோம்
பல பிரிக்ஸ் நாடுகள் பல ஆண்டுகளாக அமெரிக்க டாலரிலிருந்து விலகிச் செல்ல அழுத்தம் கொடுத்தபோது, இந்தியா அதற்கு ஒரு தடையாக இருந்துள்ளது. பிரிக்ஸில் உள்ள மற்ற நாடுகளை விட இந்தியா எங்களுடன் ஈடுபட மிகவும் விருப்பமாகவும் திறந்ததாகவும் உள்ளது” என்று கோர் பாராட்டியுள்ளார். தனது உறுதிமொழி விசாரணையின் போது செனட் வெளியுறவுக் குழுவின் முன்பு கோர் இந்த கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.