தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சுதந்திரமாக பேசவும், பயணிக்கவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
வாக்குத் திருட்டுக்கு எதிராக ஒரு கோடிபேரிடம் கையெழுத்து வாங்கும் இயக்கத்தை, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்
பாஜக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதேபோன்று, பஜார் வீதியில் இருந்த கடைகளுக்குச் சென்று பொதுமக்களிடமும் ஆதரவாகக் கையெழுத்துப் பெற்றார். இதன் மூலம் ஒரு கோடி பேரிடம் கையெழுத்து பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “பாஜக அரசுக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறப்போகிறோம். இரண்டு கோடி கையெழுத்துகள் பெறுவதற்கு லட்சியமாக வைத்துள்ளோம். எல்லாத் திருட்டையும் முடித்துவிட்டு, வாக்குகளைத் திருட வந்துவிட்டார்கள். உங்களுடைய வாக்கைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று வலியுறுத்தினார்.
”ஜிஎஸ்டி – அபத்தமான பொய்”
ஜிஎஸ்டி குறைப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “ஜிஎஸ்டி வரி குறைத்ததால் மக்களுக்குப் பயன் என்பது அபத்தமான பொய். இந்திய மக்களை ஏமாற்றலாம் என்று பிரதமர் மோடி நினைக்கிறார், ஆனால் ஏமாற்ற முடியாது. மக்கள் விவரமானவர்கள். காங்கிரஸ் கொண்டு வந்த ஜிஎஸ்டியை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்று முன்பு பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது, உலகப் பொருளாதார நிபுணர்களும் அறிஞர்களும் ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
இந்திய மக்களின் சேமிப்பு குறைந்திருக்கிறது, நாடு இன்னும் மோசமாகப் போய்விடும் என்று மோடிக்கு அறிவுரை கூறியிருக்கிறார்கள். இது அவருடைய கண்டுபிடிப்பு கிடையாது. இதுவரை மக்கள் அனுபவித்து வந்ததற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறீர்களா? பொருளாதாரம் திவாலாகிவிட்டது” என பதிலளித்தார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பேசுகையில், “குழந்தைகளுக்கு எந்த மொழி தேவையோ, அதை அவர்கள் படித்துக் கொள்வார்கள். அதை யாரும் திணிக்க வேண்டாம். சென்னை தி.நகரில் இந்தி பிரச்சார சபா இருக்கிறது. அதை யாராவது பூட்டினார்களா? புதிய கல்விக் கொள்கை மூலம் செருப்பு தைத்தவன் செருப்பு தைக்க வேண்டும், முடி வெட்டுபவன் முடி வெட்ட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இதுதான் பிரச்சனை. இதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம். மக்களுடைய வரிப்பணம் தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய பணம். இவர் யார் எங்களுக்கு தரமாட்டோம் என அதிகாரம் செய்வது. உண்மையில் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்த அரசு இயங்குகிறதா?” என கேள்வி எழுப்பினார்.
”விஜயை சுதந்திரமாக விடுங்கள்”
திமுக மீதான விஜயின் விமர்சனம், அவரது கட்சி நிர்வாகிகள் மீது தொடுக்கப்படும் வழக்குகள் குறித்த கேள்விகளுக்கு, “இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் பரப்புரை செய்யலாம் மற்றும் கருத்து சொல்லலாம். தமிழ்நாடு அரசிற்கு என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், விஜயை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர் பரப்புரை மேற்கொள்ளட்டும். அவர் பேசட்டும். என்ன பேசுகிறார் என்று பார்க்கலாம். அதன் மூலம் என்ன பலன் கிடைக்கிறது என்றும் பார்க்கலாம். காங்கிரஸை விஜய் விமர்சிப்பதில்லை என சிலர் கூறுகின்றனர். உண்மையில் எங்களை விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் தமிழ்நாடு மற்றும் மத்தியில் ஆளுங்கட்சியாக இல்லை” என்று தெரிவித்தார்.
அண்ணாமலை – டிடிவி தினகரன் சந்திப்பு குறித்து பேசுகையில், “இயற்கைக்கு முரணான கூட்டணி; தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி அதிமுக-பாஜக கூட்டணி. எத்தனை பேர் ஒற்றுமையாக இருக்கிறோம், ஒற்றுமையாக இருக்கிறோம் என்று சொன்னாலும், அது நிராகரிக்கப்பட்ட கூட்டணி” என்றும் செல்வப்பெருந்தகை பதிலளித்தார்.