ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோத உள்ளன.
ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன.
ஃபைனலில் நுழைந்த பாகிஸ்தான்
ஆசியக் கோப்பை போட்டிகள் பரபரப்பான இறுதிக்கட்டட்தை எட்டியுள்ளன. அதன்படி, நேற்று நடைபெற்ற வாழ்வா? சாவா போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சொதப்ப, 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்களை மட்டுமே சேர்த்தது. ஆனாலும், பந்துவீச்சில் மிரட்ட, வங்கதேச அணியால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, 4 புள்ளிகளுடன் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி
முன்னதாக சூப்பர் 4 சுற்றில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா, முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. அதைதொடர்ந்து தற்போது பாகிஸ்தான் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நடப்பு ஆசியக் கோப்பையில் ஏற்கனவே லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்று என இரண்டு முறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெற்றன. அந்த இரண்டிலுமே இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், மீண்டும் மூன்றாவது முறையாக இரு அணிகளும் மோதும் சூழல் உருவாகியுள்ளது. அதோடு, ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி வரும் 28ம் தேதி அன்று, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்க உள்ளது.
ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா?
லீக் சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து, சூப்பர் 4 சுற்றில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தி மீண்டும் வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் தான், இறுதிப்போட்டியிலும் வென்று, நடப்பு ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்தியா – இலங்கை இன்று மோதல்
இதனிடையே, இன்று நடைபெறும் கடைசி சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. ஏற்கனவே விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால், இலங்கை அணி ஆசியக் கோப்பையிலிருந்து வெளியேறிவிட்டது. இது ஒரு சம்பிரதாய போட்டியாகவே நடைபெறுகிறது. நடப்பு ஆசியக் கோப்பையில் இதுவரை தோல்வியையே கண்டிராத ஒரே அணியான இந்தியா, அந்த பயணத்தை அப்படியே இறுதிப்போட்டிக்கும் தொடர இன்றைய போட்டியில் வெற்றி பெற தீவிர முனைப்பு காட்டும். அதேநேரம், ஆறுதல் வெற்றியை பதிவு செய்ய இலங்கை அணியும் மல்லுக்கட்ட தயாராகி வருகிறது.