முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிசம்பர் மாத தொடக்கத்தில் ஓபிஎஸ் டெல்லி சென்ற நிலையில், கட்சியை பதிவு செய்ய சென்றதாக கூறப்பட்டது. ஏற்கெனவே அறிவித்த கூட்டத்தை ஓபிஎஸ் தள்ளிவைத்திருந்த நிலையில், ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
மேலும் ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் டிச.23-ம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அல்லது அடுத்த நாள் வரும் எம்ஜிஆர் நினைவு தினத்தில் முறைப்படி புதுக்கட்சியை அறிவிக்க ஓபிஎஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.