அதிமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளியம்மாள்: ஆட்சி மாற்றம், மரண தண்டனை குறித்த பரபரப்பு பேச்சு!
நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வந்த காளியம்மாள் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அதிமுகவில் இணைந்துள்ளார். அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால் அதிமுகவில் இணைந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், காளியம்மாள் இன்று இணைந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
அதிமுகவில் சேர்ந்தது ஏன்?
’’வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், ஆட்சி மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விலைவாசிகள் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அடிமட்டத் தொண்டர் ஒருவர் உயர் பதவிக்கு வர முடியும் என்பதால்தான் அதிமுகவில் இணைந்துள்ளேன். அதிமுகவில் இருந்து எனது அரசியல் பயணம் தொடரும்.
2013ஆம் ஆண்டு வரை தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தேன். 2013 முதல் கடலோர மக்களுக்காகக் களத்தில் பணியாற்றி வந்தேன். அண்மையில் அரசியல் கட்சியில் இருந்துதான் விலகினேன். மக்கள் பணியைக் கைவிடவில்லை.
எனக்கும் அரசியல் தளத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. என் குழந்தைகளிடம் இந்த ஓராண்டாய் நேரம் செலவிட்டேன்.
கட்சியின் தலைமை முடிவு செய்தால், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன். தமிழ்நாட்டில் பெண் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு ஆகிய பிரச்சினைகள் உள்ளன.
மரண தண்டனை அளிக்க வேண்டும்
12 வயது, 14 வயது எனக் குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் கொடூரர்களுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவள்தான். எனினும் இத்தகைய கயவர்களைக் கழுவில் ஏற்றினால்தான் குற்றங்கள் குறையும்.’’
இவ்வாறு காளியம்மாள் தெரிவித்தார்.