சட்டமன்ற தேர்தலுக்கான சில முக்கியமான வாக்குறுதிகளை இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் சீமான். அப்படி என்ன சொன்னார்.?
சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுகவின் முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று, அதன் நிறுவனர் எம்ஜிஆரின் பிறந்த நாளை ஒட்டி வெளியிட்டார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மகளிருக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அவர் அறிவித்தார். இந்நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சரமாரியான கேள்விகளை எழுப்பி, விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அவை என்ன என்று இப்போது பார்க்கலாம்.
“தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடியாக மாறும்“
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பில் புதிதாக எதுவும் இல்லை என்று கூறியதோடு, ஏற்கனவே வழங்கப்படும் ஆயிரம் ரூபாயோடு, இன்னொரு ஆயித்தை சேர்த்து வழங்குவதால், தமிழ்நாட்டின் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக மாறும் என்று கூறினார்.
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டது.?“
ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற அறிவிப்பு குறித்து பேசிய அவர், இலவச பயணத்தை ஆண்கள் கேட்டார்களா என கேள்வி எழுப்பினார். மேலும், ஏற்கனவே போக்குவரத்துத் துறை ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பில் செல்வதாகவும், இப்போது இந்த செலவை எங்கிருந்து எடுப்பார்கள் என்றும், இது நல்ல திட்டமா, நஷ்டமா என கேள்வி எழுப்பினார்.
இலவச பேருந்து பயணம் என கூறும் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்துடன் அந்த பேருந்தில் செல்வாரா.? அந்த அளவிற்கு பேருந்து தரமாக இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பிய சீமான், இப்போது ஓடும் பேருந்துகள் கைலான் கடை இரும்பு போல் உள்ளதாக விமர்சித்தார்.
மேலும், ஏற்கனவே இலவசமாக பயணிக்கும் பெண்களிடம், நீ ஓசியில் தானே வருகிறாய், அப்படி ஓரமாக போய் நின்றுகொண்டு வா என்று பேருந்துகளில் கூறுவதை கேட்டதில்லையா என்றும் சீமான் வினவினார்.
“ஆக்கப்பூர்வமான திட்டத்தை சொல்லுங்கள்“
அதேபோல், வீடு கட்டிக் கொடுக்கும் திட்டத்தை விமர்சித்த அவர், ஏற்கனவே இரு ஆட்சிகளிலும் கோழிக் கூடு போல் வீடு கட்டிக் கொடுக்கப்படுவதாகவும், அவர்கள் யாராவது அந்த வீட்டில் போய் இருப்பார்களா என்றும் கேட்டார். மேலும், புதிதாக, ஆக்கப்பூர்வமாக ஏதாவது திட்டத்தை சொல்லச் சொல்லுங்கள் என்றும் வலியுறுத்தினார்.
“மகளிர் வருவாய் ஈட்டும் அளவிற்கு வேலை கொடுங்கள்“
அதோடு, இலவச பேருந்து அல்லாமல், தரமான பேருந்தை வழங்கி, அதில் கட்டணம் செலுத்தி செல்லும் அளவிற்கு வசதியை மக்களுக்கு தரச் சொல்லுங்கள் என்று கூறினார். மேலும், மாதம் ஆயிரம், இரண்டாயிரம் வழங்காமல், 20 ஆயிரம் ரூபாய் ஈட்டும் அளவிற்கு தாய்மார்களுக்கு வேலை வழங்கச் சொல்லுங்கள் என்றும் சீமான் தெரிவித்தார்.