தவெக 3ஆம் ஆண்டையொட்டி விஜய் கூறுகையில், ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க என தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தலில் களத்தில் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், அந்த வகையில் ஜனநாயகன் படத்தை முடித்த விஜய், தீவிர அரசியலில் களம் இறங்கினார். தேர்தலுக்கு முன்னதாக மதுரையில் மாநில மாநாட்டையும் நடத்தி அசத்தினார். அடுத்தாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த வகையில் கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் அதிகளவு மக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது.
3ஆண்டில் தவெக
இதனால் நடிகர் விஜய்யின் தவெகவின் செயல்பாடுகள் 2 மாதங்கள் முழுமையாக முடங்கியது. இதனையடுத்து மீண்டும் புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் பிரச்சார கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். அந்த வகையில் இன்று தவெக தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து 3ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த நிலையில் கடந்ந 2 ஆண்டுகள் அரசியல் தொடர்பாகவும், 2026ஆம் ஆண்டு தேரதல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக் கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு, இன்று தொடங்குகிறது.
மக்களோடு மக்களாக தவெக
இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும், இயல்பு தாண்டியும் நிறைவு செய்து, நீள்கிறது நம் அரசியல் பெரும்பயணம். முதன்மை அரசியல் சக்தியாகப் பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக, மக்களோடு மக்களாகக் கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும். நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம். சலனங்களைப் புறந்தள்ளி, சமநிலை தவறாத, அளக்கவியலாத ஆழ்கடல் த.வெ.க.; எவராலும் விலக்க இயலாத விரிவானம் த.வெ.க.; அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும், சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றிப் போர்முரசம் த.வெ.க.
அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்
2026 சட்டமன்றத் தேர்தல் களம், இதுவரை இல்லாத புதிய சூழலைச் சுமந்து நிற்கிறது. இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில், களத்தை நமதாக்கி, தேர்ந்த தெளிவுடனும் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக, அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம். அனைத்து மக்களின் அமோக ஆதரவுடன், தீர்க்கமுடன் ஒற்றுமையாகக் களமாடி, ஆட்சி பீடத்தைக் கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம் என விஜய் தெரிவித்துள்ளார்.