தேர்தல் நெருங்கி வரும் நிலையில், யாருடன் கூட்டணி என எந்த முடிவும் அறிவிக்காமல் தேமுதிக இழுத்தடித்து வருகிறது, எனவே இ ன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெருங்கும் தேர்தல்- தொடரும் கூட்டணி பேச்சுவார்த்தை
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகிறது. அதிலும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆளாக அதிமுக கூட்டணியை உறுதிசெய்துள்ளது. கடந்த ஆண்டே பாஜகவை தங்கள் அணியில் இணைத்த அதிமுக, அடுத்ததாக பாமக, அமமுக, ஐஜேகே, தமாகா உள்ளிட்ட கட்சிகளை சேர்த்துள்ளது.
அடுத்தாக தேமுதிக எந்த பக்கம் செல்லும் என தெரியாமல் அரசியல் களம் குழம்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அதிக தொகுதிகளை கேட்டதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கழட்டி விடப்பட்டது. இதனையடுத்து 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக கை கொடுத்தது தேமுதிக மட்டுமே, எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ராஜ்யசபா சீட் கொடுக்காத அதிருப்தி காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறியது.
எந்த கூட்டணியில் தேமுதிக
அதே நேரம் தேமுதிகவை சமாதானம் செய்யும் வகையில் மார்ச் மாதம் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலின் போது சீட் ஒதுக்கப்படும் என அதிமுக அறிவித்தது. ஆனால் இதனை தேமுதிக தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலையில் 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியை உறுதி செய்யும் வகையில் தேமுதிக இரண்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் 15 தொகுதிகள் தேமுதிகவிற்கு ஒதுக்க வேண்டும், ஒரு மாநிலங்களவை தொகுதி வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
ஆனால் அதிமுக தரப்போ அதிகபட்சமாக 6 முதல் 7 தொகுதியும் ஒரு மாநிலங்களவை பதவி மட்டும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதேபோல திமுக தரப்பில் அதிகபட்சம் 6 தொகுதி மட்டுமே என உறுதியாக தெரிவித்து விட்டது. ஆனால் 15 தொகுதிக்கும் குறைவாக கொடுத்தால் கூட்டணிக்கு வரமாட்டோம் என தெரிவித்து விட்டது. மேலும் நீங்கள் ஆட்சி அமைக்கவும், முதலமைச்சராக ஆகவும் நாங்கள் உதவி செய்கிறோம். எனவே எங்களை மதித்து, மரியாதையாக நடத்த வேண்டும் வெளிப்படையாகவே பிரேமலதா தெரிவித்திருந்தார்.
தேமுதிக இன்றைய மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
இந்த நிலையில் இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்ந கூட்டத்தில் யாருடன் கூட்டணி என பிரேமலதா முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுக- அதிமுக என இரு தரப்பிலும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்படும் எனவும், அந்த வகையில் இன்றைய கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக இறுதி முடிவெடுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.