வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என பெண் ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.
தஞ்சாவூர்: டிரேடிங் செயலியில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என கூறி தஞ்சாவூர் நகர் பகுதியை சேர்ந்த என்ஜினியரிடம் இருந்து ரூ.15.50 லட்சத்தை ஆன்லைன் வாயிலாக மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை நகர பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் கட்டுமான என்ஜினியராக வேலை செய்து வருகிறார். இவரது வாட்ஸ்-அப் எண்ணிற்கு கடந்த மாதம் 9-ம் தேதி ஆன்லைன் டிரேடிங் முறையில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என பெண் ஒருவர் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இதைத்தொடர்ந்து என்ஜினியர் வாட்ஸ்-அப் சாட்டிங் மூலம் பெண்ணிடம் உரையாடலை தொடங்கினார்.
அப்போது டிரேடிங் செயலியில் குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என அந்தப் பெண் என்ஜினியரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய என்ஜினியரை டிரேடிங் செயலியால் லாபம் அடைந்த நபர்களின் வாட்ஸ் அப் குழுவில் சேர்த்தார். அப்போது அந்த குழுவில் இருந்தவர்களும் டிரேடிங் செயலியால் லாபம் கிடைப்பது உண்மைதான் என என்ஜினியரை நம்ப வைத்தனர்.
இதையடுத்து என்ஜினியருக்கு வாட்ஸ்-அப் குழு மூலம் செயலியை பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அனுப்பியுள்ளனர். அந்த லிங்கிற்கு சென்று செயலியை பதிவிறக்கம் செய்த என்ஜினியர் தொடக்கத்தில் ரூ.50 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செயலியில் பதிவாகி இருந்த வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். இதற்கான லாபத்தொகை அவரது செயலியில் இருந்த வாலட் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த என்ஜினியர் தொடர்ந்து 7 தவணைகளாக ரூ.15 லட்சத்து 57 ஆயிரத்து 379 – ஐ ஆன்லைன் மூலம் செயலியில் இருந்த வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்தார்.
இதற்கான லாபத்தொகை அவரது செயலியில் இருந்த வாலட் கணக்கில் இருந்தது. பின்னர் வாலட் கணக்கில் இருந்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றுவதற்காக வாட்ஸ் – அப் குழுவை தொடர்பு கொண்ட போது, அந்த குழுவில் இருந்த நபர்கள் போலியானவர்கள் என்பதும், செயலி பிளாக் செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அப்போதுதான் தனக்கு பண மோசடி நடந்திருப்பதை என்ஜினியர் உணர்ந்தார். இது குறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் என்ஜினியர் பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் மும்பை, கேரளா, தெலுங்கானா போன்ற வெளி மாநில வங்கி கணக்குகள் என்பது தெரிய வந்தது .மேலும் இதுகுறித்து சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலி ஆர்.டி.ஓ. செயலி வாயிலாக மோசடி
இதேபோல் போலி ஆர்.டி.ஓ. செயலி மூலம் தஞ்சையை சேர்ந்த வியாபாரியிடம் ரூ.11.75 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலி ஆர்.டி.ஒ. செயலி மூலம் தஞ்சையை சேர்ந்த வியாபாரியிடம் ரூ.11 3/4 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா பகுதியை சேர்ந்தவர் 39 வயதான வியாபார் ஒருவர் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 4-ந்தேதி தனது செல்போனில் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தியுள்ளார். அப்போது அதில் இருந்த ஒரு குழுவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைன் ஆர்.டி.ஒ. சலான் டிராபிக் பைன் என்ற செயலியின் (போலி) குறுந்தகவலுடன் கூடிய லிங்க்கை அந்த குழுவில் இருக்கும் நபர் யாரோ அனுப்பியுள்ளார்.
இந்த லிங்கை (வைரஸ் பைல்) தெரிந்தும், தெரியாமலும் வியாபாரி கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அந்த செயலி வியாபாரியின் செல்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து வியாபாரியின் 3 வங்கிக் கணக்குகளில் வைத்திருந்த சேமிப்புத்தொகையில் இருந்து ரூ.2 லட்சம் டெபிட் செய்யப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தது. அப்போதுதான் தனது செல்போன் இணையவழி மோசடி கும்பல் மூலம் ஹேக் செய்யப்பட்டிருப்பதை வியாபாரி உணர்ந்தார்.
இதுகுறித்து வியாபாரி தனது வங்கி கிளைக்கு சென்று தகவல் தெரிவிப்பதற்குள், மீண்டும் 19 பரிவர்த்தனைகளாக வியாபாரியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 லட்சத்து 71 ஆயிரத்து 301-ஐ ஹேக்கிங் முறையில் ஒரு சில மணி நேரங்களிலேயே இணையவழி மோசடி கும்பல் டெபிட் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரி பணம் டெபிட் செய்யப்பட்டிருப்பது குறித்து தனது பகுதியில் உள்ள வங்கி கிளையில் கேட்டுள்ளார்.
அப்போதுதான் வியாபாரிக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரது வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்து அவர் தஞ்சை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.