திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபர் குடும்பத்துடன் சேர்ந்து 33 வயது காதலியை கொலை செய்து, உடலை செப்டிக் டேங்கில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Crime Affair: இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறி, இறுதியில் கொலையில் முடிந்துள்ளது.
33 வயது காதலி கொலை
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நிஷத்புரா பகுதியில் உள்ள காலியான குடியிருப்பு ஒன்றின், செப்டிக் டேங்கில் இருந்து அழுகிய நிலையில் 33 வயது பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றியுள்ளனர். புகார் கிடைத்த 24 மணி நேரத்தில் வழக்கு முடிவை எட்டியதாகவும், விசாரணையில் காதல்,துரோகம், மிரட்டல் மற்றும் கொலை என இன்ஸ்டாகிராமில் தொடங்கிய உறவு கொலையில் முடிந்தது குறித்தும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
யார் அந்த பெண்?
கொலை செய்யப்பட்ட பெண் அஷ்ரஃபி எனப்படும் சியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த அவர், கடந்த திங்கட்கிழமை அன்று அவரது காதலரும் ,ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையுமான சமீர் என்பவரால் கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடும்பத்தின் ஆதரவுடன் கொலை செய்துவிட்டு, இரும்பு பெட்டிக்குள் உடலை வைத்து கமலா நகரில் உள்ள தனது வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் மறைத்து குற்றத்திற்கான தடயங்களை சமீர் அழிக்க முயன்றுள்ளனர்.
இன்ஸ்டாவில் மலர்ந்த காதல்..
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக சியா மற்றும் சமீர் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளனர். இயல்பான சாட் ஆக தொடங்கிய பழக்கம், நாளடைவில் நட்பாகி திருமணத்தை மீறிய காதலாகவும் மாறியுள்ளது. இதன் விளைவாக சுமார் 3 மாதங்களுக்கு முன்பாக சொந்த ஊரை விட்டு வெளியேறி, சமீருடன் சேர்ந்து வாழ்வதற்காக போபாலில் கமலா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சியா குடியேறியுள்ளார். இதனால் அவருக்கும், சமீரின் மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. பொதுவெளியிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது.
திருமணமா? ரூ.5 லட்சமா?
ஒரு கட்டத்தில் சமீரை சியா நேரடியாகவே மிரட்ட தொடங்கியதும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் அல்லது ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி எடுப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். இந்த சூழலை எதிர்கொள்ளமுடியாமல் மனமுடைந்த சமீரின் மனைவி, கணவனை விட்டு பிரிந்து ஜபல்பூரில் உள்ள பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சூழலில் தான் சியா மற்றும் சமீர் இடையே திங்கட்கிழமை அன்று மீண்டும் தீவிரமான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
காதலியை கொன்றது எப்படி?
வாக்குவாதத்தின் போது வார்த்தைகள் முற்றியதில், ஆத்திரமடைந்த சமீர் சியாவை கழுத்தை நெறித்ததில், அவர் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது தாய், சகோதர் மற்றும் சகோதரியை சம்பவ இடத்திற்கு அழைத்து, தடயங்களை முடிந்தவரை அழித்துள்ளனர். பின்பு இரும்பு பெட்டிக்குள் சியாவின் உடலை வைத்து, நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்கு அருகில் உள்ள செப்டிக் டேங்கில் வீசியுள்ளனர். அனைத்தும் முடிந்துவிட்டது என கருதிகொண்டு இருண்ட நிலையில், வியாழக்கிழமை அன்று அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், இரும்பு பெட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதை உணர்ந்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
சிக்கிய குற்றவாளிகள்:
தகவலறிந்து சம்பவ இடத்திகு வந்த போலீசார் பெட்டியில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். உடல் மிகவும் மோசமாக அழுகி இருந்ததால், காயங்களை சரியாக அடையாளம் காணமுடியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கையில் விளக்கு மற்றும் 26 மே 1992 என குறிப்பிடப்பட்டு இருந்த டாட்டூவை கொண்டு அது சியா என உறுதி செய்யப்பட்டது.
சமீர் தலைமறைவான நிலையில் அவரது சகோதரர், தாய் மற்றும் சகோதரி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சமீரின் மனைவியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கிறப்படுகிறது. அதேநேரம், சியா ஏற்கனவே மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் மூன்று முறை திருமணமானவர் என்பதும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.