விசிக-வுக்கு இம்முறை 8 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவலை திருமாவளவன் உள்ளிட்ட விசிக முக்கிய நிர்வாகிகளுக்கு திமுக தரப்பிலிருந்தே தெரிவிக்கப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். விசிக முக்கிய பொறுப்பாளர்கள் இதை அரைகுறை மனதுடன் ஏற்றுக் கொண்டாலும் அடுத்த கட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கும் மண்டல, மாவட்டச் செயலாளர்களுக்கும் இதில் திருப்தி இல்லை என்கிறார்கள்.
“செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் விசிக பலமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் கட்சிக்காக உழைத்துவரும் நிர்வாகிகளுக்கு இதுவரை எந்த அங்கீகாரமும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஒற்றை இலக்கத்தில் தொகுதிகளைக் கொடுத்தால் ஏற்கெனவே போட்டியிட்டவர்களுக்கே சரியாய் போய்விடும். அதனால் குறைந்தது 12 தொகுதிகளையாவது இம்முறை கேட்கவேண்டும்” என இரண்டாம் கட்ட நிர்வாகிகள் வலியுறுத்துவதால் அவர்களை சமாதானப்படுத்த வழி தெரியாமல் திருமாவளவன் தவித்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.