அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என கூறியுள்ளார்.
ஜெயலலிதா இறந்த அன்று என்னை முதலமைச்சராக பதிவியேற்க சொல்லி அப்போதைய அதிமுக அமைச்சர்கள் வலியுறுத்தியதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தலைகீழ் மாற்றம்
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் உடல்நிலை குறைவு காரணமாக அதே ஆண்டு டிசம்பரில் அவர் உயிரிழந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக செயல்பட்டு வந்தார். இதற்கிடையில் சசிகலாவை முதலமைச்சராக்கும் பணிகள் நடக்க, அதற்குள் சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் சிறை தண்டனை அனுபவிக்கும் சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்து தர்ம யுத்த செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் அரியணையில் அமர்ந்தார். சசிகலா தண்டனைக் காலம் முடிந்து வருவதற்குள் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். பிரிந்து கிடந்த ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இணைந்து நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை நடத்தினர். பின்னர் 2022ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.
சசிகலாவின் புதிய கட்சி
இந்த நிலையில் 9 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் சசிகலா கட்சி தொடங்கியிருக்கிறார். ராமநாதபுரத்தில் நடைபெற்ற கட்சியின் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் என்ன நடந்தது என தெரிவித்துள்ளார். அதாவது, “2016ம் ஆண்டு தேர்தல் முடிந்து ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. 72 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார். நான் அவரை வீட்டுக்கு அழைத்து வருவதற்கு நல்ல நாள் பார்த்து வைத்திருந்தேன்.
ஆனால் திடீரென யாரும் எதிர்பாராத வகையில் மாரடைப்பு வந்து விட்டது. அதனால் தான் அவர் உயிரிழந்து விட்டார். அதேசமயம் வெளியில் எதிரிகளெல்லாம் நான் தான் ஜெயலலிதாவை கொன்று விட்டேன் என கதை கட்டி விட்டார்கள். இதெல்லாம் யாராவது நம்புவாங்களா?. நீங்கள் அரசியலுக்காக சொன்னால் அது எப்படி உண்மையாகும்?. எல்லாவற்றையும் நாம் பார்த்தோம்.
ஜெயலலிதா இறந்த பிறகு அன்று இரவே அவர் சிகிச்சைப் பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் அப்போதைய அதிமுக அமைச்சர்கள் அனைவரும் வந்து என்னைப் பார்க்கிறார். சின்னம்மா நீங்கள் முதலமைச்சராகி விடுங்கள் என சொன்னார்கள். எல்லா எம்.எல்.ஏ.,க்களும் அப்படியே வந்து சொன்னார்கள்.
நான் அதற்கு, ஒரு அரசியல்வாதியாக ஜெயலலிதாவிடம் பழகவில்லை. என் சொந்த அக்காவாக மட்டுமே அவரை நினைத்தேன். அதனால் அக்கா இறந்திருக்காங்க. இப்போது என்னால் முதலமைச்சராக பதவியேற்க முடியாது. அவருக்கு செய்ய வேண்டிய காரியத்தை ஜெயலலிதா முறைப்படி வீட்டில் செய்ய வேண்டி இருக்கிறது. எனவே ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருக்கட்டும். அமைச்சர்கள் அப்படியே இருக்கட்டும். நடுவில் செங்கோட்டையனை அமைச்சரவையில் நீக்கப்பட்ட நிலையில் அவரை சேர்க்க வேண்டும் என சொன்னேன். இருப்பவர்கள் முதலில் பதவியேற்க சொல்ல, அன்று இரவே அனைவரும் பதவியேற்றனர்.