தமிழகத்தில் பரவும் சின்னம்மை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து, பனியின் தாக்கம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சின்னம்மை பாதிப்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகரித்து வருகிறது. இதனையடுத்து எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
சின்னம்மை நோய் பாதிப்பு அதிகரிப்பு
1. சின்னம்மை நோய் என்பது Varicella-Zoster வைரஸ் காரணமாக ஏற்படும் மிகவும் எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோயாகும். இது ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் இருமும்போது அல்லது தும்மும்போது வெளிவரும் காற்றுத் துளிகள் (airborne droplets) மூலம். கொப்பளங்களில் (vesicles) இருந்து வரும் திரவத்தை தொடுவதால், அல்லது அவர்கள் பயன்படுத்திய உடைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்துவதால் பரவும்.
2. இந்நோய் பொதுவாக லேசான காய்ச்சல், சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் தொடங்கி, பிறகு உடலில் சிறிய நீர் திவளைகள் போன்ற கொப்புளங்கள் தோன்றி, பின்னர் உடலெங்கும் பரவும். ஓரிரு நாட்களில் வெடித்து, பின்னர் உடைந்து காய்ந்து விடும்.
இந்த நோய் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பொதுவாக சிறிய அளவு பாதிப்பைதான் ஏற்படுத்தும் கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் ஆகியோருக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படலாம். நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தனிமைப்படுத்துதல் மற்றும் சரியான பராமரிப்பு மேற்கொண்டால் இது எளிதாக குணமாகிவிடும்.
பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்:
- பாதிக்கப்பட்டவர்களை அனைத்து கொப்புளங்களும் காய்ந்து விழும்வரை (சுமார் 7-10 நாட்கள்) வீட்டில் தனிமைப்படுத்தி வைத்தல்.
- நோய் பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்: முழுமையாக குணமடைந்த பிறகே அனுப்பவும்.
- பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல்
- தன் சுத்தம், கைகளை அடிக்கடி கழுவுதல்.
- இருமல் அல்லது தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடிக் கொள்ளுதல்.
- நீர் சத்து மிகுந்த ஆகாரங்கள், சத்தான உணவு உண்ணுதல்
- பாதிக்கப்பட்டவர்களின் உடைகள், படுக்கை விரிப்புகளை, கிருமி நாசினி கொண்டு (அல்லது) சுடு தண்ணீரில் சுத்தம் செய்தல்.
- நோய் அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால், அவர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்லவும்.