அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாஜக தங்களிடம் 70 தொகுதிகளை ஒப்படைக்குமாறும், தாங்களே தொகுதிகளை பிரித்து கூட்டணி கட்சிகளுக்கு ஒப்படைக்கிறோம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஒரு பக்கம் தொகுதிப் பங்கீட்டை முடித்து வரும் நிலையில், அதிமுக இன்னும் தொகுதிப் பங்கீட்டை முடிக்க முடியாமல் தத்தளித்து வருகிறது.
நெருக்கடி தரும் பாஜக:
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆளுமைகளில் இருந்த அதிமுக 2வது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, தமாக, பாமக ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த தேர்தலில் பாஜக அதிமுக-வுடனான கூட்டணியில் இருந்தாலும், முக்கிய முடிவுகளை அதிமுக-வை எடுக்க விடாமல் பல நெருக்கடிகளை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரையில் பிரதமர் மோடி வந்த தினத்தில் அவரை வரவேற்பதற்கு முன்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் நேரில் சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியிடம் பேசிய பியூஷ் கோயல், அதிமுக முயற்சியால் பாமக மட்டுமே கூட்டணிக்குள் வந்துள்ளது. அமமுக, தமாக, ஐஜேகே, தமமுக ஆகிய கட்சிகளை பாஜக-தான் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.
70 தொகுதிகள்:
இதனால், 70 தொகுதிகளை மொத்தமாக பாஜக-விடம் கொடுத்துவிடுங்கள், எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்டு? என்பதை நாங்கள் நிர்ணயித்து பிரித்துக் கொடுத்துவிடுகிறோம் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பியூஷ் கோயலின் இந்த பேச்சுவார்த்தையால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்துள்ளார்.
இதையடுத்து, பியூஷ் கோயலிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி பாஜக-விற்கு 25 தொகுதிகள் அளிக்கிறோம் என்றும், மற்ற கட்சிகளுக்கு தேவையான பங்கீட்டை நாங்களே பிரித்துக் கொடுக்கிறோம் என்று கறார் காட்டியுள்ளார். ஆனாலும், எடப்பாடி பழனிசாமி கூறி தொகுதிகள் ஒதுக்கீட்டில் பியூஷ் கோயல் திருப்தி அடையவில்லை என்றே கூறப்படுகிறது.
பொதுமக்கள் மத்தியில் அதிமுக பாஜக-வின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தொடர்ந்து விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் இருந்து வரும் நிலையில், தொகுதி ஒதுக்கீட்டு முடிவில் அவர்களை முடிவு எடுக்க அனுமதிப்பது, பாஜக-விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்குவது அதிமுக-வின் எதிர்காலத்தை மிகுந்த கேள்விக்குறியாக்கி விடும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிக தொகுதி கேட்கும் பாஜக:
பாஜக-வினர் கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 11.7 சதவீதம் வாக்குகள் பெற்றதால் இந்த தேர்தலில் அதற்கு ஏற்ப தங்களுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக, ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் நாம் தமிழர், முதன்முறையிலே ஆட்சிக்கட்டிலில் அமரத்துடிக்கும் தவெக என பல முனைப் போட்டிகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டின் மிகப்பெரிய கட்சியான அதிமுக களத்தில் இறங்கியுள்ளது. பாஜக தங்களுக்கு 35 தொகுதிகளை குறைந்தது ஒதுக்க வேண்டும் என்று அதிமுக-விற்கு நெருக்கடி அளித்து வருகின்றனர்.