டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை பாராட்டியுள்ள தோனி, கவுதம் கம்பீரின் சிரிப்பு நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
MS Dhoni Insta Post: இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய அணியை பாராட்டிய தோனி:
அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி நடப்பு சாம்பியனான இந்திய அணி, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து பல்வேறு தரப்பில் இருந்தும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இறுதிப்போட்டியை நேரில் கண்டுகளித்த, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி தனது சமூக வலைதள கணக்கு வாயிலாக வாழ்த்தி பாராட்டியுள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தலைமைப் பயிற்சியாளர் கம்பீரை பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.
”மிகப்பெரிய வாழ்த்துகள்”
கடந்த 2024ம் ஆண்டு ஜுன் 30ம் தேதி இந்திய அணி ரோகித் தலைமையில் வென்ற போது இன்ஸ்டாவில் வாழ்த்து தெரிவித்து இருந்த தோனி, அதே ஆண்டின் ஜுலை மாதம் 14ம் தேதிக்குப் பிறகு எந்தவொரு பதிவியையும் வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்க, தோனி மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “அகமதாபாத்தில் வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கும், பயிற்சியாளர் குழுவிற்கும், உலகம் முழுவதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகப்பெரிய வாழ்த்துகள். நீங்கள் அனைவரும் விளையாடுவதை பார்ப்பது என்பது மிகப்பெரும் மகிழ்ச்சி.
”சிரிப்பு நல்லா இருக்கு கோச்”
பயிற்சியாளரே உங்கள் முகத்திற்கு சிரிப்பு நன்றாக உள்ளது. தீவிரத்தன்மையுடன் கூடிய மகிழ்ச்சி என்பது மிகவும் பயங்கரமான கலவை. நல்லபடியாக செய்து முடித்திருக்கிறீர்கள். கொண்டாடுங்கள் நண்பர்களே. பும்ராவை பற்றி நான் எதுவும் எழுதாமல் இருப்பதே நல்லதே. சாம்பியன் பந்துவீச்சாளர்” என தோனி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இறுதிப்போட்டியில் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா முக்கிய பங்கு வகித்தார். அரையிறுதி போட்டியிலும் பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில், மிகவும் சிக்கனமாக பந்துவீசி இந்திய அணியை கரையேற்றியது குறிப்பிடத்தக்கது.
கம்பீர்.. தோனி.. வேற வேற..
தோனியின் பதிவை அவரது ரசிகர்கள் பலரும் பகிர்ந்து, இது தான் அவருக்கும் கம்பீருக்கும் இடையே உள்ள வித்தியாசம் என குறிப்பிட்டு வருகின்றனர். தனக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என கம்பீர் பல இடங்களில் தோனி மீது மறைமுகமாக வன்மத்தை கொட்டி வருவதாகவும், ஆனால் அவரோ வெளிப்படையாகவும், மனமாரவும் கம்பீரை பாராட்டியுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர். இதுதான் உண்மையான தலைவனுக்கு அடையாளம் என்றும் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.