கூட்டணி வாய்ப்புகளை கோட்டை விட்ட தவெக: ஆதவ் மீது ஆதங்கத்தைக் கொட்டிய விஜய்

120 0

தவெக-வை நெருங்கி வந்த கட்சிகளுடன் கூட்டணியை பேசி முடிக்காமல், முறுக்கி கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனா மீது அதன் தலைவர் விஜய் அதிருப்தியில் இருப்பதாக பனையூர் வட்டாரங்கள் சொல்கின்றன.

பலமான கூட்டணியை கட்டமைக்க வேண்டும் என்பதற்காகவே ஆரம்பத்திலேயே, “ஆட்சியில் பங்கு” என்ற அஸ்திரத்தை எடுத்து வீசினார் விஜய். அவரின் இந்த உத்தியானது பல கட்சிகளுக்கும் சபலத்தை உண்டாக்கியது.

முக்கியமாக, காங்கிரஸ் கட்சியானது விஜய்யை ஆயுதமாகப் பயன்படுத்தி கிட்டத்தட்ட திமுக-வை மிரட்டவே ஆரம்பித்தது. தவெக-வுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளை பனையூருக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனாவிடம் ஒப்படைத்தார் விஜய். அது மாத்திரமல்லாது, மற்ற கட்சிகளில் இருக்கும் முக்கிய தலைகளை தவெக பக்கம் தள்ளிக் கொண்டு வரும் பொறுப்பையும் ஆதவ்விடமே ஒப்படைத்தார். அப்படித்தான் முதல் விக்கெட்டாக செங்கோட்டையனை உள்ளே இழுத்துப் போட்டார் ஆதவ்.

ஆனால், பிற கட்சி பிரபலங்களை தவெக-வுக்கு இழுத்து வரும் விஷயத்தில் காட்டிய அக்கறையை கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவரும் விஷயத்தில் ஆதவ் காட்டவில்லை. தனது ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ அமைப்பு எடுத்துக் கொடுத்த புள்ளி விவரங்களை மட்டுமே நம்பிக் கொண்டு கூட்டணிக்கு காத்திருந்த கட்சிகளை ஆதவ் கண்டுகொள்ள‌வில்லை என்கிறார்கள்.

நவம்பர் வரை தவெக-வுக்கு சிக்னல் கொடுத்துக் கொண்டிருந்த டிடிவி.தினகரனுக்கு பனையூர் பக்கமிருந்து எந்த பதிலும் இல்லை. செங்கோட்டையன் மூலமாக தூதுவிட்ட போதும் விஜய் தரப்பிலிருந்து தினகரனுடன் யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன்வரவில்லை. இதனால் அதிருப்தியடைந்த தினகரன், “ஜெயலலிதா போன்ற சீனியர்களை பார்த்த நான், நேற்று அரசியலுக்கு வந்த ஜூனியர்களிடம் நானாகப் போய் பேச வேண்டுமா?” எனக் கொதித்திருக்கிறார். இது தெரியாமல், “புத்தாண்டுக்குப் பிறகு தினகரன் நமது கூட்டணிக்கு வருகிறார்” என விஜய்யை நம்பவைத்துக் கொண்டிருந்தார் ஆதவ்.

இதேபோல் விஜய்யை ”எங்க வீட்டுப் பிள்ளை” என்று சொல்லிக் கொண்டிருந்த பிரேமலதாவையும் தவெக சரியாக அணுகவில்லை. தவெக கூட்டணி தொடர்பாக என்.ஆனந்த் தரப்பில் நம்பகமான பதில் வராததால் ஆதவ் அர்ஜுனாவிடம் பேசினார் சுதீஷ். அவரும், “பொங்கலுக்குப் பிறகு பேசுவோம்” எனச் சொல்லிவைக்க, சத்தமே இல்லாமல் தேமுதிக-வை தங்கள் பக்கம் இழுத்துப் போட்டுவிட்டது திமுக.

இன்னொரு பக்கம் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஓபிஎஸ் உள்ளிட்டோருக்கும் தவெக தான் முதல் சாய்ஸாக இருந்தது. ஆனால் அங்கே, முன்னவர் செங்கோட்டையனுக்கு தரப்பட்ட ‘மரியாதைகளை’ பார்த்துவிட்டு அவர்களும் திமுக பக்கமே திரும்பிவிட்டார்கள். இப்போதே அமைச்சராகிவிட்ட தோரணையில் அதிகாரம் காட்டும் ஆதவ் அர்ஜுனாவும் இந்த விஷயத்தில் சிறு துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

இப்படி எதிர்பார்த்திருந்த அனைவருமே திமுக பக்கம் சென்றுவிட்ட நிலையில், கடைசி கட்டமாக விஜய் காங்கிரஸை பெரிதும் நம்பினார். பிரவீன் சக்கரவர்த்தி அவரை நேரில் ச‌ந்தித்துப் பேசி, காங்கிரஸ் தலைமையிடம் நேரடியாகப் பேசுமாறு வழிகாட்டினார். ஆனால் அவரோ, அந்தப் பொறுப்பையும் ஆதவ்விடமே ஒப்படைத்தார். இதனிடையே, திமுக-வின் கெடுபிடியான பேச்சுவார்த்தைகளை பிடிக்காத கிரிஷ் சோடங்கரும் தவெக தரப்பை அணுக முயற்சித்தார்.

ஆனால், அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைக் குழுவையே நியமிக்காமல் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தியதை அவர் ரசிக்கவில்லை. அதேசமயம் ஆதவ் அர்ஜுனா செல்வப்பெருந்தகை போன்ற தமிழக காங்கிரஸாரை நம்பாமல் கே.சி.வேணுகோபால் மூலம் ராகுல் காந்திக்கு தூது அனுப்பினார். ராகுல் காந்தியோ, ஆதவ்வை நேரடியாகச் சந்திக்காமல் தனது சகாக்கள் மூலமாகவே பேச்சுவார்த்தை நடத்த நினைத்தார்.

காங்கிரஸ் திமுக பக்கம் செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஹைதராபாத் வந்த ராகுல் காந்தியை சந்திக்க ஆதவ் அர்ஜுனா பெரிதும் முயற்சித்தார். ஆனால், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 15 பேர், திமுக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டதால் ராகுல் ஆதவ்வை சந்திக்கவில்லை. கடைசியில் காங்கிரஸும் தங்கள் கையை விட்டுப் போனதால் விஜய் ரொம்பவே அப்செட்டாகிப் போனார்.

இதையடுத்து, “கூட்டணிக்கு காத்திருந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி முடிக்காமல் இப்படி நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே” என விஜய் ஆதவ் அர்ஜுனாவிடம் தனது அதிருப்தியை கொஞ்சம் சத்தமாகவே வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார்கள் தவெக முக்கிய புள்ளிகள்.

Related Post

அமைச்சர் மெய்யநாதனை புறக்கணிக்கிறாரா அமைச்சர் ரகுபதி?

Posted by - August 26, 2025 0
புதுக்கோட்டை மாவட்ட திமுக-வில் அமைச்சர்கள் ரகுபதியும் சிவ.வீ.மெய்யநாதனும் அசைக்கமுடியாத சக்தியாக இருப்பவர்கள். இதில், ரகுபதி புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருப்பதால் கூடுதல் அதிகாரத்துடன் கோலோச்சி…

மதுரை மாநாட்டிலாவது திருந்துவாரா விஜய்? பவுன்சர்கள் ஒகே.. ஆனா ரவுண்ட்ஸ் எப்போ? தவெக சம்பவம் செய்யுமா?

Posted by - August 21, 2025 0
மதுரை மாநாட்டின் மூலமாவது தவெக தலைவர் விஜய் தீவிர அரசியலை முன்னெடுப்பாரா? என அவரது கட்சி தொண்டர்களே ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மதுரை மாநாட்டில் விஜய் தனது மாநிலம்…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

அண்ணா பல்கலை. உதவி பேராசிரியர்கள் போராட்டம் வெற்றி! மீண்டும் பணி! அமைச்சர் அதிரடி!

Posted by - February 26, 2026 0
அண்ணா பல்கலை. தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு மீண்டும் பணி; அதிரடியாக அறிவித்த அமைச்சர் கடந்த ஒரு மாத காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அண்ணா பல்கலை. தற்காலிக…

திடீர் ட்விஸ்ட்.! திமுக கூட்டணியில் இணையும் புதிய கட்சி.!

Posted by - February 28, 2026 0
தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்து வரும் நிலையில், தற்போது எஸ்டிபிஐ கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு திமுக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *