ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை என கடம்பூர் ராஜூ கேள்வி
தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள், இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.
தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகிய சில நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சி.டி.நிர்மல் குமாரைத் தொடர்ந்து திலீப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன், விஜய் உள்ளிட்டோரும் அதிமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக, மதுரையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் 50க்கும் அதிகமான அதிமுகவினர் பாஜகவில் இணைந்தனர்.
இச்சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமியின் உருவப்படம் எரிக்கப்பட்ட நிலையில், கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன.எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்த பாஜக இளைஞரணி மாவட்ட தலைவர் தினேஷ் உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில், பாஜகவை கண்டித்து அதிமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் நியூஸ்18 தமிழ்நாடுக்கு சிறப்பு பேட்டி அளித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, பாஜக ஐடி விங் நிர்வாகி அதிமுகவில் இணைந்தது கண்டு அண்ணாமலை மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் ஏன் பதற்றப்பட வேண்டும் என்பது எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது.ஒரு கட்சியில் இருந்து பிரிந்து மற்ற கட்சிகளுக்கு செல்வது சகஜமான ஒன்று, அதிமுகவிலிருந்து பலரும் பாஜகவிற்கு சென்று உள்ளனர். அதிமுகவிற்கு திமுகவில் நிர்மல் குமார் இணைந்து இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
கோவில்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருவருபடத்தை எரித்தவர் ஒரு விளம்பர விரும்பி. அவரை மனநல மருத்துவமனை தான் சேர்க்க வேண்டும். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும், அவர் நடவடிக்கை எடுப்பது குறித்து பொறுத்து இருந்து பார்க்கலாம். அண்ணாமலை என்ன எதிர்வினை ஆற்றுவார் என்று பார்ப்போம், ஒன்றிய அரசு என்று கூறும் திமுகவிற்கு எதிராக பேசி தான் வருகிறார் தவிர எந்த எதிர்வினையும் அவர் ஆற்றவில்லை.அதிமுக வரலாறு அண்ணாமலைக்கு தெரியாது அவர் இன்னும் அரசியலில் பக்குவப்படவில்லை, தானாக விரும்பி வந்து கட்சியில் சேருபவர்களை எந்த அரசியல் கட்சியினரும் சேர்த்துக் கொள்வார்கள், இந்த அரசியல் அரிச்சுவடி கூட அண்ணாமலைக்கு தெரியவில்லை,எங்களுடன் பாஜக கூட்டணி சேர்ந்த காரணத்தினால் தான் இன்றைக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அந்த கட்சிக்கு கிடைத்துள்ளனர்.96ல் பாஜக அரசு மத்தியில் அமைவதற்கு அதிமுக தான் உறுதுணையாக இருந்தது,அதிமுகவை முன்னே எந்த இயக்கமும் தமிழகத்தில் இல்லை, இந்த அண்ணாமலை இல்லை எந்த அண்ணாமலை வந்தாலும் முடியாது,தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற முடியாத என்றார்.