நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கியுள்ளார்.
2021 தேர்தல் பரப்புரையின் போது நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் தங்களுக்கு தெரியும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது வரை நீட் தேர்வு ரத்து செய்யப்படாமல் இருப்பதாகவும், அந்த ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என்றும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த நிலையில் அரியலூர் மருத்துவக் கல்லூரியில் அனிதா பெயரிலான நினைவரங்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் கேட்கும் நீட் தேர்வு ரகசியம் என்னவென்று தற்போது சொல்கிறேன்.நமது மாணவர்களின் கல்வி உரிமை மறுக்கப்படும் போது வரும் எதிர்ப்புக்குரலே அந்த ரகசியம். அனிதாவின் பெயரை பார்க்கும்போது எல்லாம் நீட் தேர்வில் எதிர்ப்பு என்ற எண்ணம் நமது மனதில் இருக்கும். எந்தவித சமரசமும் இல்லாமல் நீட் தேர்வு ரத்தாகும் வரை சட்ட போராட்டம் தொடரும். பிரதமரை சந்திக்கும் போதும் இதைத்தான் கூறினேன். இதுதான் எங்களிடம் உள்ள ரகசியம்” என்று கூறினார்.