திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு எஸ்.பி.ஐ காலணியில் அமைந்துள்ளது. அப்பகுதியில் இறகு பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு இன்று காலை வருகை தந்தார்.
இதற்கான பெயர் பலகையில் எம்.பி சிவாவின் பெயர் போடப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அத்துடன், அமைச்சர் கே.என்.நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.
கருப்பு கொடி காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிவா ஆதரவாளர்களுடன் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திருச்சி சிவா வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து கருப்பு கொடி காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர், காவல் நிலையத்திலும் தி.மு.கவினர் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இச் செயலுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.