இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி
பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக சென்னை வேளச்சேரியில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கிவைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு இன்புளூயன்சா பாதிப்பு உள்ளதா என்பதை அறிய 476 நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உயிரிழப்பது அதிகரித்துள்ளதாகவும், இதுகுறித்து இதய நிபுணர்களின் ஆய்வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தலைமை செயலக பணியாளர்களுக்கு 17ஆம் தேதி முழு உடல் பரிசோதனை நடைபெறும் என்றார். இன்புளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.