அதிமுகவின் 8-வது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுள்ள நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இதுவரை பொதுச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தது யார் யார் என்று தற்போது பார்க்கலாம்.
1972-ம் ஆண்டு அதிமுகவை தொடங்கிய எம்ஜிஆர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக 1978-ம் ஆண்டு வரை நீடித்தார். அவரையடுத்து, நெடுஞ்செழியன் 1980 வரை இப்பொறுப்பில் இருந்தார். எம்.ஜி.ஆர், நெடுஞ்செழியனை அடுத்து கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு வந்த ப.உ.சண்முகம், 4 ஆண்டுகள் 275 நாட்களும், ராகவானந்தம் ஓராண்டு 216 நாட்களும், அதிமுக பொதுச் செயலாளராக இருந்தனர்.
இவர்களை அடுத்து மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர், இறுதிக் காலம் வரை பொதுச் செயலாளராக இருந்தார். எம்ஜிஆர் இறப்புக்குப் பின்னர் 1989-ம் ஆண்டு அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, அன்று முதல் அவர் இறக்கும் வரை 27 ஆண்டுகள் 300 நாட்களுக்கு அந்த பதவியில் தொடர்ந்தார்.
இவரை தொடர்ந்து, வி.கே.சசிகலா 2016 டிசம்பர் முதல் வெறும் 48 நாட்கள் மட்டுமே தற்காலிக பொதுச் செயலாளராக அதிமுக தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். தற்போது, எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராகவும், அந்தப் பதவியை அலங்கரிக்கும் ஏழாவது தலைவராகவும் உருவெடுத்துள்ளார். தமிழ்நாட்டை அதிக காலம் ஆட்சி செய்த கட்சி என்ற பெருமையுடைய அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை பல நாட்கள் கழித்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.