பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது
காவிரி டெல்டா பகுதி, ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எதற்கெல்லாம் அனுமதியில்லை என்பதை பார்க்கலாம்…
கடந்த 2020ஆம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகை மண்டலம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேளாண்மைக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் தொழிற்சாலைகளையும், திட்டங்களையும் இந்த பகுதிகளில் செயல்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக, ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுகளுக்கான ஆய்வு, எரிவாயு பிரித்தெடுத்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு துளையிடுவதற்கும் அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துத்தநாக உருக்காலை, இரும்புத் தாது ஆலை, ஒருங்கிணைந்த எஃகு ஆலை, தாமிரம், அலுமினிய உருக்காலைகளை அமைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் தொடங்கவும் அனுமதி கிடையாது என கூறப்பட்டுள்ளது.