காக்கையின் உருவ அமைப்பை ஒத்து இருப்பதால் இந்த ஆசனம் காகாசனம் என்று பெயர் பெற்றது. மேலும், காக்கையின் கால்கள் பலமாக இருப்பது போல், காகத்தின் கால்களாக பயன்படுத்தப்படும் நம் கைகள் பலம் பெறுகின்றன. காகங்கள் மிக புத்திசாலியான பறவைகள், அவை சூழலுக்கு ஏற்றாற் போல் தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் திறன் பெற்றவை.
காகாசனத்தில் நம்முடைய சுவாதிட்டான சக்கரம் தூண்டப்படுவதால் நம் உடலின் ஆற்றல் பெருகுகிறது. செய்முறை விரிப்பில் நேராக நிற்கவும். மூச்சை வெளியேற்றிக் கொண்டே குனிந்து உள்ளங்கைகளை தரையில் வைக்கவும். இரண்டு உள்ளங்கைகளுக்கு இடையில் தோள் அளவு இடைவெளி இருக்க வேண்டும்.
கை முட்டியை மடக்கி, குதிகால்களை உயர்த்தி கால் முட்டியை மேல்கைகளின் மேல் வைக்கவும். மெதுவாக கால்களை உயர்த்தி கைகளால் உடலைத் தாங்கி நிற்கவும். 20 வினாடிகள் இந்த நிலையில் இருந்த பின் மீண்டும் பழைய நிலைக்கு வரவும். தோள், முட்டி, மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் வலி இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது வலி ஏற்பட்டால் தொடர்ந்து பயில்வதைத் தவிர்க்கவும். முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.
பலன்கள்
கைகளையும் மணிக்கட்டுகளையும் பலப்படுத்துகிறது. சீரணத்தை மேம்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் இயக்கத்தை செம்மையாக்குகிறது. கவனத்தை கூர்மையாக்குகிறது. சமநிலையான உடலையும் மனதையும் அளிக்கிறது.