ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை மும்பை அணி எட்டிப் பிடித்து அசத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதவுள்ளன. சென்னை அணி கடந்த மூன்று போட்டிகளில் இரண்டில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. எனவே, சொந்த மைதானத்தில் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை ஆடிய 10 ஆட்டங்களில் 5 வெற்றியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்த இனி வரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதேவேளையில், மும்பை அணி 9 போட்டிகளில் 5 வெற்றியுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இருந்த போதும், கடைசியாக ராஜஸ்தான், பஞ்சாப் அணிகளுக்கு எதிராக 200 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து அசத்தியது. எனவே, ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் மும்பை அணி உள்ளது. மேலும், சென்னை அணிக்கு எதிராக முந்தைய லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுக்கவும் முனைப்பு காட்டி வருகிறது.இந்தப் போட்டி குறித்து நேற்றைய பயிற்சிக்குப் பின் பேசிய மும்பை அணியின் இஷான் கிஷன், மலிங்கா போன்று சென்னை வீரர் பதீரனா பந்து வீசியபோதும், அவரை எதிர்கொள்வதற்காக, தாங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறினார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் டெல்லி – பெங்களூரு அணிகள் மோதவுள்ளன.