இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு உங்கள் வீட்டில் உள்ளோர் பன்னீர் சைடு டிஷ் செய்து கொடுக்க கேட்கிறார்களா? எப்போதும் ஒரே மாதிரியான ஸ்டைலில் பன்னீரை செய்து கொடுப்பீர்களா?
இன்று அந்த பன்னீரை ஹைதராபாத் ஸ்டைலில் பன்னீர் மசாலா செய்து கொடுங்கள். இந்த ஹைதராபாத் பன்னீர் மசாலா சப்பாத்தி, நாண், புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு ஹைதராபாத் பன்னீர் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாத் பன்னீர் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 300 கிராம்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்
* நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 3-4 (நறுக்கியது)
* முந்திரி – 4-5
* தக்காளி – 2
* பசலைக்கீரை – 1 கையளவு
* கொத்தமல்லி – 3/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் + வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* சுடுநீர் – 3/4 கப்
* கரம் மசாலா – 1/4 – 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை – 1 சிட்டிகை
* துருவிய பன்னீர் – 1/4 கப்
* ஹெவி க்ரீம் – 2-3 டேபிள் ஸ்பூன்
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* ஏலக்காய் – 3
* பிரியாணி இலை – 1
* கிராம்பு – 4
* பட்டை – 1/2 இன்ச்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 – 1 1/2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பசலைக்கீரை, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் தயிரை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து, சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் 3/4 கப் சுடுநீரை ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியாக மேலே துருவிய பன்னீர், ஹைவி க்ரீம் சேர்த்து கிளறினால், சுவையான ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார்.