கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாகவே வைக்கலாம்.
ஆர்.சுந்தர்ராஜனின் மெல்லத் திறந்தது கதவு படம்தான் ஏவிஎம் தயாரிப்பில் மோகன் நடித்த முதல் படமாகும். அதேபோல் எம்எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இணைந்து இசையமைத்த முதல் படமாகும். இப்படி மெல்லத் திறந்தது கதவுக்கு நிறைய சிறப்புகள் இருந்தாலும், தியேட்டர் ஆபரேட்டரால் தலைவிதி மாற்றி எழுதப்பட்ட படம் இது என்பதே இதன் ஆகப் பெரிய சிறப்பு.
மெல்லத் திறந்தது கதவு படத்தில் மோகனும், ராதாவும் குழந்தைப் பருவ நண்பர்கள். மோகன் பட்டணத்துக்குச் சென்று படித்துவிட்டு, இளைஞனாக கிராமத்துக்கு திரும்புவார். ராதாவுக்கு அவர் மீது கொள்ளைப் பிரியம், காதல். ராதாவின் தந்தை இறந்து போக, மோகனின் தந்தை ராதாவுடன் மோகனுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பார். மோகன் மறுப்பார். ராதாவின் தாயும் இறந்து போவார். மோகன் ராதாவை ஏற்க மறுக்கக் காரணம் அமலாவுடன் அவருக்கிருந்த காதல். அமலா இறந்து போனதால் வேறு யாரையும் திருமணம் செய்வதில்லை என்ற முடிவில் மோகன் இருப்பார். இதனை அறிந்த ராதா, தனது உயிரை மாய்த்துக் கொள்ள முயல, மோகன் அவரை காப்பாற்றி, ராதாவின் காதலை ஏற்றுக் கொள்வது கதை.
ராதா மோகன் மீது கொண்டிருக்கும் காதல் முதல் பாதியிலும் மோகன் அமலா காதல் இரண்டாம் பாதியிலும் வரும். முன்னது லைவான கதை. பின்னது பிளாஷ்பேக். முன்னதுதான் மோகனும், ராதாவும் சேர்கிற மகிழ்ச்சியான முடிவை கொண்டது. மெல்லத் திறந்தது கதவு படத்தில் அருமையான பாடல்கள் இருந்த போதிலும் படம் வெளியான போது சுமாராகவே போனது. இந்நிலையில், மதுரை சினிப்ரியா திரையரங்க ஆபரேட்டர் படத்தின் முதல் பகுதியில் வரும் ராதா – மோகன் கதையை பிற்பகுதியிலும், மோகன் – அமலா கதையை முற்பகுதியிலுமாக மாற்றி ஓட்டினார். இப்போது படம் முதலில் இருந்ததைவிட கேட்சிங்காக ரசிகர்களுக்குப் பிடிக்கும் வண்ணம் மாறியது. முதலில் சோகம், பிறகு மகிழ்ச்சி என்று திரைக்கதை மாறியதும் தியேட்டரில் கூட்டம் அம்மியது. ஏவிஎம் உடனடியாக முற்பகுதியையும், பிற்பகுதியையும் மாற்றி புதிய சென்சார் சான்றிதழ் வாங்கி படத்தை மாற்றி வெளியிட்டது. படமும் பிக்கப்பாகி வெற்றி பெற்றது.
தியேட்டர் ஆபரேட்டர்கள் இதேபோல் பல விஷயங்கள் செய்திருக்கிறார்கள். நாம் என்ன படம் எடுத்தாலும், ஆபரேட்டர்களின் ரசனைக்கு ஏற்பவே அவை திரையில் ஓட்டப்படும். ஒரு பாடல் பிடிக்காவிட்டால் இல்லை ரசிகர்கள் அந்தப் பாடலை லேகாக உணர்கிறார்கள் என்று ஆபரேட்டருக்குத் தோன்றினால் அது எடிட் செய்யப்படும். அது எத்தனை பெரிய இயக்குனரது படமாக இருந்தாலும். மெல்லத் திறந்தது கதவு போல் முற்றாக திரைக்கதையை மாற்றுவது நடப்பதில்லை.