உங்கள் வீட்டில் அடிக்கடி பூரி செய்வீர்களா? பூரிக்கு பெரும்பாலும் உருளைக்கிழங்கைக் கொண்டு தான் மசாலா செய்வீர்களா? ஆனால் உருளைக்கிழங்கை அதிகமாக உட்கொண்டால், அதனால் வாய்வு தொல்லையால் அவதிப்படக்கூடும். எனவே உருளைக்கிழங்கை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதைத் தவிர்ப்பதே நல்லது.
சில சமயங்களில் பூரி செய்ய நினைத்தால், வீட்டில் உருளைக்கிழங்கு இருக்காது. இந்நிலையில் உருளைக்கிழங்கை சேர்க்காமலேயே சுவையான பூரி மசாலா செய்யலாம். இந்த பூரி மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலாவை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த பூரி மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
* கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் . 1 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* பச்சை மிளகாய் – 4
* இஞ்சி – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 6 பல்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து, உப்பு சிறிது தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி பேஸ்ட்டை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, தேவையான அளவு நீரை ஊற்றி, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கடலை மாவை நீரில் கரைத்து, அதையும் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான உருளைக்கிழங்கு சேர்க்காத பூரி மசாலா தயார்.