திருப்பூர், பல்லடத்துக்கு அருகேயுள்ள கள்ளக்கிணறு பகுதியில் நான்கு குடும்ப உறுப்பினர்கள் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்ட அன்றைய தினம் மட்டுமே தமிழகத்தில் ஒன்பது கொலைகள் நடந்திருக்கின்றன. பட்டப்பகலில் கொலைசெய்கிறார்கள், வீட்டின் கதவை உடைத்து கத்திமுனையில் கொள்ளையடிக் கிறார்கள்
சமீபகாலமாக, குற்றச் செயல்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தாறுமாறாக அதிகரித்திருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், தமிழகம் தழுவிய அளவில் 15 பேர் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 10-ம் தேதி, ஒரே நாள் இரவில் சென்னையில் இரண்டு பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈரோடு அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வயதான தம்பதி கொல்லப்பட்டதில் தொடங்கி, திருமழிசையில் ரெளடி எபினேசர் கொல்லப்பட்டது வரை, எங்கு பார்த்தாலும் ரத்தக்கறையாகக் காட்சியளிக்கிறது தமிழகம். ரெளடிகளுக்குள் நடக்கும் ‘கேங் வாரில்’ நாட்டு வெடிகுண்டுகள் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தும் கலாசாரம் அதிகரித்திருக்கிறது. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களில் எந்தவித அச்சமும் இல்லாமல் ஈடுபட்டுவருகிறார்கள் குற்றவாளிகள்.
சிவகங்கை மாவட்டம், வீரவலசை கிராமம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளைக் காட்டி மிரட்டி நடத்துனரிடம் இருந்த பணப்பையைப் பறித்துச் சென்றிருக்கிறார்கள். பணியின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள் போக்குவரத்துத்துறை ஊழியர்கள். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகக் காவல்துறை மார்தட்டிக்கொள்கிறது. ஆனால், நடக்கும் சம்பவங்கள் எல்லாமே, ‘குற்றம் செய்பவர்களுக்குக் காவல்துறைமீது துளியும் அச்சம் இல்லை’ என்பதையே உணர்த்துகின்றன. “என்னாச்சு சட்டம்-ஒழுங்கு… என்ன செய்கிறது காவல்துறை?” என்று கேட்கிறார்கள் மக்கள்.