சென்னை:
வங்கிகளுக்கு வருமான வரித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.. இது வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
நாம் வைத்திருக்கும் அடிப்படை அட்டைகளில் மிக முக்கியமானது பான் கார்டு.. வங்கி தொடர்பான எல்லா சேவைகளுக்கும் இந்த கார்டுதான் உதவுகின்றன.. காரணம், நம்முடைய அனைத்து வங்கி எண்கள், வருமான வரி கணக்கு என்று எல்லாமே இந்த பான் கார்டில்தான் இணைக்கப்பட்டிருக்கும்.
பான் கார்டு:
அந்தவகையில், வருமான வரிக்கும், பான் பார்டுக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன.. அதனால்தான், பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஒருவேளை, நீங்கள் இதுவரை வருமான வரிக்கணக்கை (ITR) தாக்கல் செய்யவில்லையானால், உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைத்த பிறகே, நீங்கள் அவ்வாறு செய்ய முடியும்.
செயலிழந்த பான் கார்டை மறுபடியும் இயங்க வைக்க வேண்டுமானால், அதற்கும் வருமானவரித்துறைதான் உதவுகிறது.. வருமான வரித்துறை இணையதளத்தில் இதற்காக விண்ணப்பித்து, 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி, ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.. வருமான வரித்துறையின், “இ- – பைலிங் போர்ட்டல்” மூலம் பான் கார்டு – ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இதே போல, “26 ஏஎஸ்” படிவம் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
வருமானவரித்துறை:
இப்படிப்பட்ட சூழலில், வங்கிகளுக்கு ஒரு முக்கிய உத்தரவினை வருமானவரித்துறை பிறப்பித்துள்ளது.. அதாவது, வங்கிகளில் ரொக்க பண பரிவர்த்தனை செய்வோரின் விபரங்களை, வருமான வரித்துறை சேகரித்து வருகிறது.. ஒரு முறைக்கு, 50,000 ரூபாய்க்கு அதிகமாக ரொக்க பணம் செலுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம், பான் எண் பெறப்படுகிறது.
அதன் அடிப்படையிலேயே, ரொக்கப்பண பரிவர்த்தனை விபரங்களும் திரட்டப்படுகின்றன. பான் எண் இல்லாதவர்களிடம், 50,000 ரூபாயோ அல்லது அதற்கு மேல் பணம் பெற வேண்டாம் என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் இருக்கிறது.. ஆனாலும், நிறைய வாடிக்கையாளர்கள், பான் எண் இல்லாமலேயே ரொக்க பண பரிவர்த்தனைக்கு அனுமதி கேட்கிறார்களாம்.. இந்த விஷயத்தை, வருமான வரித்துறையிடம், வங்கிகள் கொண்டுசென்றிருக்கின்றன.
ரொக்க பணம்:
அதனால்தான், இப்படி புதிய கடிவாளத்தை வருமானவரித்துறை போட்டுள்ளதாம். அதன்படி, இனிமேல், வங்கி வாடிக்கையாளர்கள் மட்டும், 50,000 ரூபாய் அல்லது அதற்கு மேலான ரொக்க பணத்தை வங்கியில் செலுத்த வந்தால் அவர்களிடம், ஆதார் எண், வங்கி கணக்கு விபரம், முகவரி, செல்போன் போன் எண் போன்ற தகவல்களை, அதற்கான விண்ணப்பத்தில் பெற்ற பிறகே, ரொக்க பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை, வங்கிகளுக்கு கறாராக கண்டிஷன் போட்டிருக்கிறதாம். பான் நம்பர் இல்லாதவர்களிடம், சுய விபர விண்ணப்பம் பெற்ற பிறகே, பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள அவர்களை அனுமதிக்க வேண்டும் என்ற வருமான வரித்துறையின் இந்த உத்தரவு, வாடிக்கையாளர்களின் கவனத்தை பெற்று வருகிறது.