ஈரோடு:
பாம்புகள் கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை அற்புதமாக விளக்கியுள்ளார் வனச்சரகர் சதீஷ் நிர்மல்.
இதுகுறித்து சத்தியமங்கலம் வனச்சரகர் சதீஷ் நிர்மல் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்பதை பற்றித்தான் பேச போகிறேன். பொதுவாக இந்தியாவில் பாம்புக் கடியால் இறக்கக் கூடிய நபர்களின் சராசரி எண்ணிக்கை 65 ஆயிரம்.
இது ஒரு லட்சமாக கூட அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். காரணம் கிராமங்களில் ஏற்படக் கூடிய பாம்புகடிகள் அதிகமாக பதிவு செய்யப்படுவதில்லை. அதைவிட ஒரு அச்சுறுத்தும் செய்தி என்னவெனில் 100 மனிதர்கள் உலகம் முழுவதும் பாம்புக் கடியினால் இறக்கிறார்கள் என்றால் அதில் 80 பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். இதற்கு காரணம் பாம்பு கடித்தவுடன் அதுகுறித்து சரியான புரிதல் இல்லை.
பாம்புக் கடித்தவுடன் என்ன மாதிரியான முதலுதவி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், அதை எப்படி செய்ய வேண்டும் என்ற புரிதல் மக்களுக்கு இல்லை. பாம்புகளில் Venom எனும் வேதி பொருள் உள்ளது. இதை விஷம் என்றும் கூறலாம். பலர் அவர்களது வழக்கத்திற்கு ஏற்றவாறு கூறி வருகிறார்கள். நச்சுத்தன்மையுள்ள பாம்புகள், நச்சுத்தன்மையற்ற பாம்புகள் என இரு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளில் மிக முக்கியமான 4 பாம்பு வகைகள் உள்ளன. அவை 1. நாகப்பாம்பு, 2. கண்ணாடி விரியன், 3. சுருட்டை விரியன், 4. கட்டு விரியன். இந்த 4 பாம்புகளால் ஏற்படக் கூடிய உயிரிழப்புகள்தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமாக இருக்கிறது. பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம், என்னவெலாம் செய்யக் கூடாது என்பதை பார்ப்போம்.
பாம்பு கடித்துவிட்டால் முதலில் நாம் பதற்றமடைய ககூடாது. அதிகமாக பதற்றமடைந்தால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் விஷம் உடல் முழுவதும் வேகமாக பரவும் வாய்ப்புள்ளது. பாம்பு கடித்தவர்களை எந்த விதமான பதற்றமான சூழலுக்கும் உள்ளாக்கக் கூடாது. பாம்புகள் கால்களிலும் கைகளிலும் அதிகமாக கடிக்கும். அவ்வாறு கடிக்கும் போது பெண்கள் காலில் உள்ள மெட்டியையும் மோதிரத்தையும் நீக்கிவிட வேண்டும்.
ஏனென்றால் பாம்பு கடித்ததும் அந்த பகுதியில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த மோதிரம், மெட்டி போன்றவை இருந்தால் அது பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். பாம்புக் கடித்த இடத்தில் குளிர்ச்சியான பொருட்களை வைக்கக் கூடாது. மருத்துவர்களும் இதை பரிந்துரைப்பதில்லை. சோப்பு போட்டும் கழுவக் கூடாது.
திரைப்படங்களில் பார்ப்பது போல் பாம்பு கடித்தவுடன் விஷத்தை உறிஞ்சு எடுத்தல் கூடாது. அது உறியக் கூடிய நபரின் உயிருக்கும் ஆபத்தை கொடுக்கும். பாம்பு கடித்த இடத்திற்கு 2 இன்ச் தள்ளி கட்டு போட வேண்டும். அப்போதுதான் ரத்த ஓட்டத்தின் அளவு குறையும். ஆனால் சிலர் பதற்றத்தில் கட்டு போடுகிறேன் என்று எண்ணி இறுக்கமாக போட்டுவிடுவார்கள். இதனால் ரத்த ஓட்டமே போகாமல் செயலிழந்து போகும் அபாயமும் ஏற்படும்.
பாம்பு கடித்தவர்களுக்கு தண்ணீரும் உணவு கொடுக்க கூடாது. அப்போது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். பாம்பு கடித்தவர்கள் நடந்தோ ஓடியோ மருத்துவமனைக்கு செல்லக் கூடாது. அவரை அமைதிப்படுத்தி இரு சக்கர வாகனமோ 4 சக்கர வாகனமோ இருந்தால் அதில் அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம். அந்த பகுதிக்கு 108 ஆம்புலன்ஸ் வரும் வரை பாம்பு கடித்த நபரை rescue position இல் படுக்க வைத்திருக்க வேண்டும்.
அதாவது இடது புறமாக தலையை வைத்து படுக்க வைக்கலாம். பாம்பு கடித்தால் அது என்ன வகையான பாம்பு என்பதை கண்டறிய முயற்சிக்க வேண்டும். பாம்பு கடித்தவுடன் அச்சமடையாமல் பாம்பின் நிறம் என்ன, அதன் தலையின் வடிவம் என்ன என்பதை முடிந்தால் பார்க்கலாம்.
காரணம் அந்த பாம்பின் தலை முக்கோண வடிவில் இருந்தால் அது நச்சுத்தன்மை உடைய பாம்பு என்பதை அறிந்து கொள்ளலாம். நீள் கோள வடிவத்தில் இருந்தால் அது நச்சுத்தன்மை அற்ற பாம்புகள் ஆகும். இதை எதற்காக பார்க்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் சொல்லும் போது அவர் அதற்கேற்ப சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும். பாம்புகள் தனது கோரை பற்களின் மூலமாகத்தான் விஷத்தை கக்குகின்றன.
நச்சுத்தன்மை கொண்ட பாம்புகள் என்றால் இரு பற்களும் நன்றாக பதிந்திருக்கும். நச்சுத்தன்மையற்ற பாம்புகள் என்றால் கடித்த புள்ளிகள் சரியாக தெரியாது, 4 அல்லது 5 பற்கள் இருப்பது போல் அரை வட்டமாக தெரியும். நச்சுத்தன்மையற்ற பாம்பு என தெரிந்து கொண்டால் நமது பதற்றம் குறையும். பாம்பு கடித்ததை கூட மறந்துவிட்டு அந்த பாம்பை பிடித்து அடித்து கொன்று அதை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற கதையெல்லாம் உண்டு. இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயம். அதை தவிர்க்கலாம்.
பாம்பு ஒரு வீட்டில் நுழைந்துவிட்டால் வனத்துறை, தீயணைப்புத் துறை, பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களை தொடர்பு கொள்ளலாம். பாம்பு பிடித்தவுடன் அவரை கையில் எடுத்து காட்ட சொல்லி செல்பி எடுப்பது, புகைப்படம் எடுப்பது ஆபத்தை ஏற்படுத்தும். வினாடிகள் கவனம் சிதறினாலும் பாம்புகள் அந்த பிடிக்கும் நபரை தீண்டிவிடும். எனவே பாம்பு கடித்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தெரிந்து கொண்டு செயல்பட்டால் நாட்டில் பாம்பு கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும். இவ்வாறு சதீஷ் நிர்மல் தெரிவித்துள்ளார்.