நீங்கள் மார்கெட்டுகளில் காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ப்ராக்கோலியை பார்த்திருப்பீர்கள். அதைப் பார்த்ததும், பலருக்கும் எப்படி இதை சமைப்பது என்று ஒரு கேள்வி எழும். நீங்கள் இந்த ப்ராக்கோலியை வாங்கி சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் ப்ராக்கோலியைக் கொண்டு குருமா செய்யுங்கள்.
இந்த ப்ராக்கோலி குருமா சப்பாத்தி, சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ப்ராக்கோலி சுவையானது மட்டுமின்றி, ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய காய்கறியும் கூட. அடிக்கடி இதை சமைத்து சாப்பிட்டால், உடலில் போதுமான அளவில் வைட்டமின் சி இருக்கும்.
உங்களுக்கு ப்ராக்கோலி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ராக்கோலி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ப்ராக்கோலி – 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – சிறிது
வதக்கி அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 3
* பொட்டுக்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் – 1/4 கப்
செய்முறை:
* முதலில் ப்ராக்கோலியை உப்பு மஞ்சள் தூள் சேர்த்த சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், ப்ராக்கோலியை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, வரமிளகாய் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின் அதில் பொட்டுக்கடலை, துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு நிறம் மாற வதக்கியதும், தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த விழுதை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சிறிது நீரை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் ப்ராக்கோலியை சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ராக்கோலி குருமா தயார்.