சென்னை:
அடுக்குமாடி பொது சேவை மின் கட்டணத்தை குறைப்பு விவகாரத்தில் வீட்டுக்கே வந்து அதிகாரிகள் சோதனை செய்ய தொடங்கி உள்ளனர். எந்த வீடுகள் எல்லாம் பத்து வீடுகள் அல்லது மூன்று மாடி அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளதோ அவற்றுக்கு மட்டுமே பொது சேவை மின் கட்டணத்தை குறைக்கப்படும் என்று அறிவித்து, கணக்கெடுப்பு பணியை மின் வாரியம் துவக்கியுள்ளது.
தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம், கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தியது. மின் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்த நிலையில், அப்போது பல வீடுகளை உடைய அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘லிப்ட், மோட்டார் பம்ப்’ போன்றவற்றை உள்ளடக்கிய பொது சேவை மீட்டர் பிரிவுக்கு, ‘ஒன் டி’ என்ற தனி மின் கட்டண விகிதம் நிர்ணயம் செய்யப்பட்டது.
அதாவது கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த தொகையான 1 யூனிட்டிற்கு, 8 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் மாதம் நிரந்தர கட்டணமாக கிலோ வாட்டிற்கு, 100 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த கட்டணம், இந்தாண்டு ஜூலை முதல் 1 யூனிட், 8.15 ரூபாயாகவும்; மாதம் நிரந்தர கட்டணம் கிலோ வாட்டிற்கு, 102 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. அரசின் இந்த முடிவால் வாடகைதாரர் உட்பட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். பலரும் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்தனர்..
இதையடுத்து, ‘பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள, ‘லிப்ட்’ வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு, பொது சேவை கட்டணம் யூனிட்டிற்கு, 8 ரூபாயில் இருந்து, 5.50 ரூபாயாக குறைக்கப்படும்’ என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் 18ம் தேதி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து அரசாணையும் வெளியிடப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID-யை மின் கட்டண ஆணை எண் 7-ஐ நாள் கடந்த 2022 செப்டம்பர் மாதம் உருவாக்கியது. தமிழக முதல்வர் கடந்த 18ம் அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பொது வசதிகளுக்கான மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய்க்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இக்குடியிருப்புகளில் வசிக்கக்கூடிய நடுத்தர மக்களை இது பெரிதும் பாதிப்பதாக உள்ளது என பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் தெரிவித்த கருத்துகளை பரிசீலித்து, பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும், உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு பொதுப் பயன்பாட்டிற்கு செலுத்தப்பட வேண்டிய கட்டணம் ஒரு யூனிட்டிற்கு எட்டு ரூபாய் 15 பைசாவிலிருந்து ஐந்து ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இதை தொடர்ந்து தமிழக அரசின் கொள்கை வழிக்காட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை பத்து வீடுகள் அல்லது அதற்கு குறைவாகவும், மூன்று மாடிகள் அல்லது அதற்கு குறைவாகவும் உள்ள மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய தாழ்வழுத்த மின்கட்டண வகை IE-ஐ அறிமுகப்படுத்தியும் இக்குடியிருப்புகளுக்கு மின்கட்டணம் ரூ.5.50/யூனிட் என நிர்ணயித்தும் உள்ளன.
இந்தக் கட்டணங்கள் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும்” என்று அறிவித்தது. இதன்படி மின் கட்டண குறைப்பு இம்மாதம், 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதை தொடர்ந்து தற்போது, மூன்று மாடி உடைய வீடுகளை கணக்கெடுக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுதும், அடுக்குமாடி குடியிருப்புகளில், ‘ஒன் டி’யில் இடம்பெறும் பொது சேவை பிரிவுக்கு, 9 லட்சம் மின் இணைப்புகள் மாற்றப்பட்டிருந்தது. அதில் ஒவ்வொரு மின் இணைப்பையும் அதிகாரிகள் வீடு தேடி ஆய்வு செய்து வருகிறார்கள். அரசு அறிவித்துள்ள சலுகையில் இடம்பெறும் வீடுகள் கணக்கெடுக்கும் பணியை அதிகாரிகள் செய்து வருகிறார்கள். வீடுகளை நேரில் ஆய்வு செய்த பின்னரே, மின் கட்டணம் குறைக்கும் நடவடிக்கையில், அதாவது கட்டணம் விகிதத்தை மாற்றும் பணியை அதிகாரிகள் செய்வார்களாம். எனவே உங்கள் வீடுகளுக்கு வந்தார்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்..