ICC World Cup 2023 : 2003-ஆம் ஆண்டைப் போல, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை இந்திய ரசிகர்களின் கோப்பை கனவு சுக்கு நூறாக உடைந்தது.
“நாங்கள் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் ஆட்டத்தின் முடிவு நமக்கு சாதகமாக அமையவில்லை”என இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6 ஆவது முறையாக கோப்பையை வென்றது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் வீறுநடை போட்டு வந்த இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் எளிதில் தோல்விய தழுவியது.
இந்நிலையில் இந்திய அணியின் அதிர்ச்சி தோல்விக்கான காரணங்கள் குறித்து அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், “இறுதிப்போட்டி முடிவு எங்களுக்கு சாதகமாக இல்லை. நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. நாங்கள் எல்லாவற்றையும் முயற்சி செய்தோம். எதுவும் சாதகமாக அமையவில்லை. குறிப்பாக கோலியும் ராகுலும் நன்றாக ஆடினார்கள். மற்ற பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க தவறினர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.” என்றார்.தொடர்ந்து பேசுகையில், “பேட்டிங்கின் போது ரன் குவிக்க தவறினோம். குறிப்பாக, நாங்கள் 270 முதல் 280 ரன்கள் வரை அடிப்போம் என எதிர்பார்த்தோம். நிச்சயமாக இன்னும் 20-30 ரன்களை அதிகமாக அடித்திருக்க வேண்டும். 240 ரன்கள் மட்டும் எடுத்திருக்கும்போது, விக்கெட்டுகளை வேகமாக எடுக்க வேண்டும். அதை எங்களால் செய்ய முடியவில்லை. அதேபோல இரவு நேரத்தில் மின் ஒளிக்கு கீழ் விளையாடும் போது விக்கெட் பேட் செய்ய சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். அதை காரணமாக சொல்லி தப்பிக்க விரும்பவில்லை. ” என்றார்.
“அதேநேரம் ஹெட்டும் லபுஷேனும் சிறப்பாக ஆடினார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து வெளியேற்றிவிட்டார்கள். பிட்ச்சின் தன்மை காரணமாக இரண்டாம் இன்னிங்ஸில் பேட்டிங் ஆடுவதற்கு சுலபமாக இருந்தது. ஆனால், தோல்விக்கு எந்த காரணத்தையும் சொல்லி தப்பிக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் போதுமான ரன்களை அடிக்கவில்லை. அதுவே தோல்விக்கு முக்கிய காரணம், அவ்வளவுதான்” என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக அகமதாபாத் மைதானத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் தொடங்கிய இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் தொடக்க வீரர்களாக களம் கண்டனர். கில், 4 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட ரோகித் சர்மா, 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் ஸ்ரேயஸ் ஐயரும் 4 ரன்களில் அவுட் ஆனது அணியை ஆட்டம் காணச் செய்தது. பின்னர் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிறகு கோலி 54 ரன்களிலும், ராகுல் 66 ரன்களிலும் ஆட்டமிழக்க 50 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி 240 ரன்கள் எடுத்ததுஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைதொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் மூவரும் 50 ரன்களுக்குள்ளாகவே அவுட்டாகி வெளியேற பின்னர் டிராவிஸ் ஹெட் மற்றும் லபுஷேனும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 120 பந்துகளில் 137 ரன்கள் அடித்திருந்தபோது டிராவிஸ் ஹெட் அவுட் ஆகினார். இறுதியில் 43 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலிய இலக்கை எட்டியது.