சென்னை:
சென்னை பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் கீழ்கட்டளை பகுதிகள் வெள்ளத்தில் சிக்க என்ன காரணம் , ஞாயிறு இரவு என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
ஞாயிறு அன்று காலை முதலே பலத்த மழை விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. ஞாயிறு இரவே தண்ணீர் எஸ் கொளத்தூர் மடிப்பாக்கத்தை இணைக்கும் பாலத்தை ஒட்டி வேகமாக சென்று கெண்டிருந்தது.ஒரு கட்டத்தில் இரவு 10 மணி அளவில் தண்ணீர் பாலத்தை ஒட்டிய தடுப்பு சுவர் இல்லாத பகுதிகளில் வேகமாக ஊருக்குள் வரத் தொடங்கியது. இந்த தண்ணீர் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் போக வேண்டியது.
தடுப்பு சுவர் இல்லாத காரணத்தால் கோவிலம்பாக்கம் எஸ் கொளத்தூர், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் பகுதியிலும் தண்ணீர் வேகமாக ஊருக்குள் வரத் தொடங்கியது. தண்ணீர் இரவு 10 அளவிலேயே காலுக்கு வந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் வேகமாக தண்ணீரில் இருந்து பொருட்களை பாதுகாக்க முயன்றனர். முடிந்தவரை மாடிக்கு எடுத்து சென்றனர்.
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை.. இன்னும் சில மணி நேரத்தில் பேய் மழை பெய்ய போகிறது என்று, நினைத்ததை விடவும் மிக மோசமான மழை காற்றுடன் பெய்து கொண்டே இருந்தது. திங்கள் கிழமை அதிகாலையிலேயே பல்லாவரம், கீழ்கட்டளை ஏரி தண்ணீர் நேரடியாக நாராயணபுரம் ஏரியை நோக்கி ஆக்ரோசமாக வரத்தொடங்கியது.
அந்த ஆக்ரோஷமான வெள்ளம் செல்லும் வழி எல்லாம் ஆக்கிரமிப்பு இருந்தது. 5000 கன அடி நீர் செல்லும் அளவிற்கு செல்ல வேண்டிய கால்வாய், வெறும் 10 அடி , 6 அடி, ஐந்து அடி சில இடங்களில் சுருங்கி இருந்தது. எல்லாமே ஆக்கிரமிப்பு வீடுகள் என்பதால் இவற்றை தாண்டி வர முடியவில்லை. ஒரு கட்டத்தில் பேய் மழை பெய்ய தொடங்கியது. தண்ணீர், எங்கெல்லாம் கரைகளில் ஓட்டைகள் இருந்ததோ அங்கே எல்லாம் ஆக்ரோஷமாக வெளியேறியது.
தண்ணீர் போக வேண்டிய பகுதிகளில் தடுப்பு சுவர்கள் போதிய அளவில் இல்லை. ஆனால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள் தண்ணீர் வரக்கூடாது என்று தடுப்பு சுவர் போட்டிருந்தனர். அந்த தடுப்பு சுவர்களே அவர்களுக்கு வில்லனாக மாறியது. ஆக்கிரமிப்பு மற்றும் தடுப்பு சுவர்களால் தடுக்கப்பட்ட தண்ணீர் அப்படியே தேங்கி குளம் போல் மாறியது. 5 அடி முதல் ஆறு அடி உயரத்திற்கு தண்ணீர் சாலைகளில் ஓடத்தொடங்கியது.
அதுவும் மிக வேகமாக ஓடத்தொடங்கியதுது. தண்ணீர் ஒரு கட்டத்தில் மிக வேகமாக வந்ததால், பல தடுப்பு சுவர்களை அடித்து உடைத்து துவம்சம் செய்தது. சில இடங்களில் 30 அடி பாதையை ஆக்கிரமித்து வீடு கட்டி இருந்தார்கள், அந்த பகுதிகளில் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் அவர்களின் வீடுகளுக்குள்ளும், அவர்கள் வீட்டை ஒட்டிய பகுதிகள் வழியாகவும் வேகமாக மடிப்பாக்கம் பகுதிகளுக்குள் வெளியேறியது.
அந்த வீடுகள் இல்லாமல் இருந்திருந்தால் தண்ணீர் நேரடியாக பள்ளத்தை நோக்கி பாய்ந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக அங்குமே ஏரளமான வீடுகள் ஆக்கிரமித்த கட்டப்பட்டிருந்ததால், மொத்த மடிப்பாக்கமும் தண்ணீர் மூழ்கியது. வேளச்சேரி ரயில் நிலையம் வரை இந்த தண்ணீர் சென்றது. வேளச்சேரியை ஒட்டிய பள்ளிக்கரணை ஏரியில் தான் தண்ணீர் அனைத்தும் கலக்க வேண்டும். அதற்கு பல இடங்களில் வழியே இல்லை..அதனால் எங்கெல்லாம் வழி கிடைத்ததோ அந்த வழியாக சென்று ஏரியை தண்ணீர் அடைந்துவிட்டது.
இது ஒரு புறம் எனில் நாராயணபுரம் ஏரி தண்ணீர் சேரும் இடத்திலேயே மொத்தமாக வழியை மறித்து அடுக்குமாடி கட்டப்பட்டிருந்தது. அந்த அடுக்குமாடி காரணமாகவும் தண்ணீர் வெளியேற முடியாமல் திணறி ஊருக்கு சென்றது. ஒரு சில பேராசை பிடித்த சுயநலவாதிகள் வீடு கட்ட அனுமதி கொடுத்தது தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.. ஆக்கிரமித்து கட்டப்பபட்ட வீடுகளுக்கு பட்டா கொடுப்பதை தவிர்த்து, மின்சாரம் வழங்குவதை தவிர்த்து இருந்தால் சென்னை பள்ளிக்கரணையும், மடிப்பாக்கமும் மோசமான நிலையை சந்தித்திருக்காது.