ஒவ்வொரு நாள் காலையிலும் என்ன சமைப்பது என்று யோசிப்பீர்களா? எப்போதும் இட்லி, தோசை செய்து போரடித்துவிட்டதா? சப்பாத்தி செய்யலாம் என்று பார்த்தால், சப்பாத்தியும் போரடித்துவிட்டதா? ஆனால் நீங்கள் சப்பாத்தி பிரியரா? அப்படியானால் அடுத்தமுறை வெறும் சப்பாத்தியை செய்வதற்கு பதிலாக மசாலா சப்பாத்தியை செய்யுங்கள்.
இந்த மசாலா சப்பாத்தி வெறுமனே சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இல்லாவிட்டால் ஊறுகாயுடனும் சாப்பிடலாம். எப்படி சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு வேலைக்கு செல்வோர் காலையில் செய்து சாப்பிட ஏதுவாக இருக்கும்.
உங்களுக்கு மசாலா சப்பாத்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சப்பாத்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு – 2 கப்
* கசூரி மெத்தி இலை – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தயிர் – 1/2 கப்
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, கசூரி மெத்தி, மிளகாய் தூள், கரம் மசாலா, சீரகத தூள், மிளகுத் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கையால் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த மாவு கலவையின் நடுவே ஒரு குழி தோண்டி, அதில் தயிர் மற்றும் சிறிது நீரை ஊற்றி, நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி ஒருமுறை பிசைந்து, 30 நிமிடம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு சப்பாத்தி உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக சேர்த்து எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான மசாலா சப்பாத்தி தயார்.