3rd Party UPI ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் வரம்பை (volume cap) கட்டுப்படுத்த, நேஷ்னல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தனது முன்மொழியப்பட்ட காலக்கெடுவை விரைவில் செயல்படுத்தக்கூடும் என தகவல் வெளியாகி இருக்கிறது.டிஜிட்டல் மயமாக்கலுக்கு நடுவே UPI மூலம் டிஜிட்டல் முறையில் பேமெண்ட்ஸ் செய்வது மக்களிடையே மிகவும் பொதுவான பழக்கமாக மாறி விட்டது. கடந்த அக்டோபரில் UPI மூலம் செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் சுமார் 7.7% உயர்ந்து 730 கோடி என்ற எண்ணிக்கையில் இருந்தது. இந்த ரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.12.11 லட்சம் கோடிக்கும் அதிகம். கடந்த செப்டம்பரில் 678 கோடி எண்ணிக்கையிலான UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன. இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ11.16 லட்சம் கோடி ஆகும்.இந்நிலையில் தற்போது UPI பரிவர்த்தனைகள், ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட எந்த UPI அடிப்படையிலான ஆப்ஸ்களிலும் பரிவர்த்தனைகளுக்கு வால்யூம் கேப் இல்லை. இந்நிலையில் தான் UPI டிஜிட்டல் சிஸ்டமிற்கு பொறுப்பான NPCI, தேர்ட் பார்ட்டி ஆப்ஸ் வழங்குநர்களுக்கான வால்யூம் லிமிட்டை கட்டுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட காலக்கெடுவை செயல்படுத்த ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இதன் பொருள் நாட்டில் ஃபோன்பே, கூகுள் பே மற்றும் பிற UPI ஆப்ஸ்கள் மூலம் டிஜிட்டல் முறையில் வரம்பற்ற பரிவர்த்தனைகளை செய்யும் திறனை யூஸர்கள் இழக்க நேரிடும். அதாவது யூஸர்கள் UPI பேமெண்ட் ஆப்ஸ் மூலம் அன்லிமிட்டட் பேமெண்ட் செய்ய முடியாது. ஃபோன்பே மற்றும் கூகுள் பே போன்ற UPI பிளாட்ஃபார்ம்கள் தற்போது மார்க்கெட்டில் சுமார் 80 சதவீத பங்குகளுடன் ஆதிக்கம் செலுத்துகின்றன. இதனிடையே எந்தவொரு UPI ஆப்ஸின் ஏகபோகத்தையும் தவிர்க்கும் பொருட்டு NPCI 30% அளவு வால்யூம் கேப் நிர்ணயிக்க வேண்டும் என்ற திட்டத்தை ரிசர்வ் வங்கி அங்கீகரிக்க காத்திருக்கிறது.
NPCI-யின் முன்மொழிவைத் தொடர்ந்து அனைத்து அம்சங்களையும் விரிவாக ஆலோசிக்க உயரதிகாரிகள் அடங்கிய ஒரு மீட்டிங் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மீட்டிங்கில் NPCI அதிகாரிகள் தவிர, நிதி அமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. ஆனால் தற்போது எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதற்கிடையே சில அறிக்கைகளின்படி, தொழில்துறை பங்குதாரர்கள் டிசம்பர் 31 என்ற காலக்கெடுவை நீட்டிக்க NCPI-யிடம் கோரி இருப்பதாகவும், தற்போது இந்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. UPI மார்க்கெட் கேப் அமலாக்கத்தில் உள்ள சிக்கல் இந்த மாத இறுதிக்குள் தீர்க்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 2020-ல் முதலில் பரிவர்த்தனைகளின் அளவை 30% கட்டுப்படுத்த NCPI பரிந்துரைத்தது. இருப்பினும் UPI ஆப்ஸ்கள் இந்த விதிக்கு இணங்க 2 ஆண்டுகள் காலக்கெடு வழங்கப்பட்டது. வரும் டிசம்பர் 31 அன்றோடு முடிய உள்ள இந்த காலக்கெடுவை நீட்டிக்கவே தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளன. சில நிறுவனங்கள் இந்த முன்மொழிவை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை ஐந்து ஆண்டுகள் நீட்டிக்க கோரி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நவம்பர் இறுதிக்குள் தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.