கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உடல்நலன் குறித்து சாமானிய மக்களிடமும் கூட அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது.
ஆரோக்கியமாக நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். நம் தாத்தா, பாட்டிக்கு வந்த நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் நமக்கு வந்துவிடக் கூடாது என்று நாம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்கத்தான் செய்வோம். அதிலும், கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு உடல்நலன் குறித்து சாமானிய மக்களிடமும் கூட அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த விழிப்புணர்வு ஒரு கட்டத்தில் எல்லை மீறிச் செல்வது நமக்கே ஆபத்தாக முடியலாம். அதாவது, நமக்கு ஏதேனும் பெரிய நோய் வந்து விடுமோ என்று எந்த நேரமும் கவலை கொண்டிருப்பது நல்லதல்ல. இதனை illness anxiety disorder (IAD) நோய் குறித்த கவலை பிறழ்வு என்று மருத்துவ ரீதியாக குறிப்பிடுகின்றனர்.
ஐஏடி ஏற்படக் காரணம் என்ன
ஒவ்வொரு மனிதருக்கும் இந்த கவலைக்கான காரணங்கள் வேறுபடும். இந்த காரணத்தினால் தான் ஐஏடி ஏற்படும் என்று துல்லியமாகச் சொல்லிவிட முடியாது. எனினும், நம் உடல் இயல்பாக வெளிப்படுத்தக் கூடிய சில அறிகுறிகள் குறித்து நாம் அச்சம் கொண்டிருந்தால் அது ஐஏடி பிரச்சினையாக மாறலாம்.
குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது ஒருவருக்கு மிகுந்த தீவிரத்தன்மை கொண்ட நோய் இருக்கும் பட்சத்தில், அதுகுறித்து வீட்டில் எப்போதும் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். அதன் எதிரொலியாக ஒரு நபருக்கு ஐஏடி பிரச்சினை ஏற்படலாம்.
குழந்தைப் பருவத்தில் மிகத் தீவிரத்தன்மை கொண்ட நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதிலிருந்து குணம் அடைந்திருந்தாலும் நோய் குறித்த கவலைகள் அதிகரிக்கலாம். எந்த விஷயத்தையும் அதிர்ச்சிகரமான மனநிலையுடன் அணுகுபவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கலாம்.
சிகிச்சை முறைகள்
ஐஏடி என்பதே கற்பனையான அறிகுறிகள் தான். இந்த நிலையில் இருப்பவர்களை அலட்சியப்படுத்தாமல் மிகுந்த மரியாதையுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.அவர்களுக்கு எந்த நோயும் இல்லை, நோய் இருப்பதாக பெரும் கற்பனையில் இருப்பதுதான் ஐஏடி பாதிப்பு என்று பொறுமையாக எடுத்துச் செல்ல வேண்டும். அதே சமயம், இவர்களுக்கான தெரஃபி, ரிலாக்ஸ் அளிக்கும் உத்திகள், மருந்துகள் என பல சிகிச்சை முறைகள் இருக்கின்றன.அதே சமயம், ஐஏடி பிரச்சினை இருப்பவர்கள் இளம் வயதிலேயே உயிரிழப்பதற்கான அபாயம் அதிகரிக்கிறது என்றும், தற்கொலை எண்ணங்கள் வளரும் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இவர்களை எந்தச் சூழ்நிலையிலும் தனிமையில் இருக்க அனுமதிக்கக் கூடாது.