இன்னைக்கு காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போறீங்களா? அதுக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்து கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு உதவ தானே நாங்க இருக்கோம். இப்ப பாருங்க ஒரு அட்டகாசமான ஐடியாவை தரோம். அது என்னன்னா, உங்கள் வீட்டில் தக்காளியும், புதினாவும் இருக்கா?
அப்படின்னா செம டேஸ்டியா ஒரு சட்னி செய்யலாம். இந்த சட்னி இட்லி, தோசையுடன் சாப்பிட அருமையா இருக்கும். முக்கியமாக இது 10 நிமிஷத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்
உங்களுக்கு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி புதினா சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* புதினா – 2 கப் (1 கட்டு)
* கொத்தமல்லி – 1/4 கப்
* புளி – 1 பெரிய நெல்லிக்காய் அளவு
* பச்சை மிளகாய் – 6-7
* சின்ன வெங்காயம் – 3-4 ((நறுக்கியது))
* தக்காளி – 3 (நறுக்கியது)
* உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* கடுகு – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* அதன் பின் பச்சை மிளகாய், சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்பு தக்காளி மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான தக்காளி புதினா சட்னி தயார்.