வரலாற்றில் இல்லாத வகையில் தென் மாவட்டங்களில் மழை பெய்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
சென்னை கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறினார். ஒரு சில இடங்களில் மேகவெடிப்பு போல மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டார். வரலாற்றில் இல்லாத அளவுக்கு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்துள்ளதால் பாதிப்பு அதிகமாக இருப்பதாக தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.நெல்லை மாவட்டத்தில் உடனடியாக வெள்ளம் வடிந்துவிடும் என்றும், ஆனால், தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளநீர் வடிய தாமதமாகும் எனவும் தலைமைச் செயலாளர் கூறி உள்ளார். தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புபடையின் 17 குழுக்களில் 425 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் மேலும் 2 குழுக்கள் தூத்துக்குடிக்கு செல்வதாகவும் கூறினார்.உணவு விநியோகம் செய்ய சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமைச் செயலாளர், 1070 என்ற இலவச எண்ணில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார். 12 ஐஏஎஸ் அதிகாரிகள், மூத்த அதிகாரிகள் என பலர் தென் மாவட்டங்களில் முகாமிட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளை அவர்கள் முடுக்கி விட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா குறிப்பிட்டார்.