வெலிங்டன்:
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த 21 வயது பெண் முழக்கமிட்ட வீடியோ டிரெண்டாகியுள்ள நிலையில், இந்த மாவோரி இன மக்கள் யார்.அவர்கள் வரலாறு என்ன என்பது குறித்துப் பார்க்கலாம்.
கடந்த சில நாட்களாகவே நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம்பெண் ஒருவர் முழக்கமிட்ட வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மைபி கிளார்க் என்ற அந்த 21 வயது பழங்குடியின நியூசிலாந்து நாடாளுமன்றத்திற்கு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
அப்போது அந்த பெண் எம்பி நியூசிலாந்தை மௌரி பழங்குடியின மக்களின் பாரம்பரிய ஹக்கா அதாவது war cry என்ற ஒன்றைச் செய்து காட்டினர். இந்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டானது.
மாவோரிக்கள்:
நியூசிலாந்து நாட்டை பொறுத்தவரை அங்கே ஆங்கிலேயர்கள் தான் அதிகம் என்றாலும் இன்னும் கூட மாவோரி பழங்குடியினர் கணிசமாக வசிக்கிறார்கள்.. அவர்கள் யார்.. அவர்களின் வரலாறு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். நியூசிலாந்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தான் இந்த மாவோரிகள்.. இவர்களுக்கு எனத் தனியாக மொழி, கலாச்சாரம், மரபுகள், பழக்க வழக்கங்கள் உள்ளன. அவர்கள் சுமார் 13 ஆம் நூற்றாண்டில், கிழக்கு பாலினேசியாவிலிருந்து படகுகள் மூலம் நியூசிலாந்திற்கு வந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அன்று அவர்கள் பின்பற்றிய கலாச்சாரம், மரபுகளை இன்றளவும் பின்பற்றிப் பாதுகாத்து வருகிறார்கள். மாவோரி அடையாளத்தின் மையக் கருத்தே வக்கபாபா என்பதாகும். இது ஒவ்வொரு தனி நபர்களையும் அவர்களின் முன்னோர்கள், நிலம் மற்றும் சமூகத்துடன் இணைக்கிறது.
வரலாறு என்ன:
இந்த மாவோரி இன மக்களுக்கு நெசவு செய்வது மற்றும் பச்சை குத்துதல் ஆகியவை முக்கிய வேலைகளாகும்.. அவர்களின் கலைப் படைப்புகளுக்கு மிகப் பெரிய வரவேற்பும் இருக்கிறது. அதில் புராணங்கள், தொன்மங்கள் மற்றும் பரம்பரை வரலாறு இடம் பெற்றிருக்கும். ஒரு காலத்தில் நியூசிலாந்து முழுக்க இந்த மவோரி இன மக்கள் பரவி இருந்தனர். ஆனால், இந்தியாவைப் போலவே அங்கும் பிரிட்டிஷ் படையெடுத்த நிலையில், அவர்கள் இருக்கும் நிலப்பரப்பு சுருங்கிவிட்டது.
நியூசிலாந்தில் மாவோரிகளுடன் பிரிட்டிஷ் இடையே பல போர்கள் நடைபெற்றது. 1840களில் தொடங்கிய இந்த போர், 1870கள் வரை நடைபெற்றது. பிரிட்டிஷ் படைக்கு நவீன ஆயுதங்கள் மற்றும் ராணுவ உத்திகளைக் கொண்டிருந்தனர். அதேநேரம் மாவோரிக்களும் கொரில்லாப் போர் முறையில் கைதேர்ந்தவர்களாகவே இருந்தனர். அவர்கள் தங்கள் நிலங்களைப் பாதுகாக்க ஆங்கிலேயர்களுடன் துணிச்சலாகப் போரிட்டனர்.
மாவோரிக்கள் வீழ்த்தப்பட்ட கதை:
இருப்பினும், பிரிட்டிஷ் படையினர் பீரங்கிகள், போர்க்கப்பல்களை மவோரி இன வீரர்கள் சமாளிக்க முடியவில்லை. வடக்குப் போர், தாரனக்கிப் போர்கள், வைகாடோ போர் எனப் பல போர்கள் நடந்த நிலையில், ஒவ்வொன்றிலும் மவோரி மக்கள் தங்கள் நிலத்தையும் உரிமைகளையும் கொஞ்சம் இழந்து வந்தனர்,
இதில் முக்கியமானது 1863இல் நடந்த வைகாடோ படையெடுப்பு. இதில் பிரிட்டிஷ் படை நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலில் பல மாவோரி குழுக்கள் தங்கள் நிலம் மற்றும் செல்வாக்கை இழந்தனர். பிரிட்டிஷ் படைகள் மாவோரிகளின் கிராமங்களை அழித்து நிலங்களை அபகரித்து, செல்வங்களைக் கொள்ளையடித்தன. இந்த போர்கள் பல மாவோரி பழங்குடியினரின் தோல்விக்கு வழிவகுத்தது,
மீட்டெடுக்கும் முயற்சி:
மேலும், இவை குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள், நில அபகரிப்பு ஆகியவற்றுக்கு காரணமாக இருந்தனர். தங்கள் சொந்த நாட்டிலேயே மாவோரி இன மக்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டனர். அப்போது ஏற்பட்ட கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார பாதிப்பு தலைமுறை தலைமுறையாகவே நீடிக்கிறது. ஆனால், சமீப காலங்களாக மாவோரி மொழி கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளது. மாவோரி இன சிறப்புகள், வரலாறு ஆகியவற்றைப் பரப்ப பல்வேறு நடவடிக்கைகள் அங்கே இப்போது எடுக்கப்பட்டு வருகிறது.