தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள். நீங்களும் அப்படி தான் சாப்பிட்டுள்ளீர்களா? அப்படி சாப்பிட்டு உங்களுக்கு போரத்துவிட்டதா?
அப்படியானால் சிறு தானியமான குதிரைவாலியைக் கொண்டு அடை தோசை செய்து சாப்பிடுங்கள். இந்த குதிரைவாலி அடை தோசை சுவையாக இருப்பதோடு, மிகச்சிறந்த ஒரு சத்தான காலை உணவாகவும் இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு குதிரைவாலி அடை தோசை ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே குதிரைவாலி அடை தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* குதிரைவாலி – 3/4 கப்
* கடலைப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
* பாசிப்பருபு – 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 3-4
* உப்பு – சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* சின்ன வெங்காயம் – 10-13 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பருப்புக்களை நீரில் நன்கு கழுவிவிட்டு, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். அத்துடன் வரமிளகாயையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பின் குதிரைவாலியையும் நீரில் கழுவி, அதையும் தனியாக நீரில் ஊற வையுங்கள்.
* 3-4 மணிநேரம் கழித்து, ஊற வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கழுவிவிட்டு, முதலில் மிக்சர் ஜாரில் குதிரைவாலியையும், வரமிளகாயையும் போட்டு, 10 நொடிகள் அரைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து அதில் பிற பருப்புக்களை சேர்த்து அரைக்க வேண்டும்.
* பின்பு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு மற்றும் பெருங்காயத் தூளை சேர்த்து நன்கு, தோசை மாவு பதத்திற்கு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், ஒரு கரண்டி மாவை தோசைக்கல்லில் ஊற்றி தோசையாக ஊற்ற வேண்டும்.
* பின் அதில் எண்ணெய் ஊற்றி, 1-2 நிமிடம் வேக வைத்து, தோசையை திருப்பிப் போட்டு, மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் தோசைகளாக ஊற்றி எடுத்தால், சுவையான குதிரைவாலி அடை தோசை தயார். இந்த தோசையை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.