டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவற்றில் கனமழை பெய்யக்கூடும்
கடந்த 3 நாட்களாக டெல்டா மாவட்டங்களிலும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஒருசில வட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பெல்ட்டில் மழை மேகங்கள் சூழ்ந்துள்ளதால், விழுப்புரம் முதல் புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலை வரை பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், டெல்டாவில் இருந்து மழை மேகங்கள், விழுப்புரம் நோக்கி நகர்ந்து வருவதால், அடுத்த சில மணி நேரத்துக்கு தென் சென்னையின் புறநகர் பகுதிகள், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்டவை கனமழையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், சென்னையில் மிகமிக அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும் சமாளிக்கக்கூடிய அளவில் பரவலாக கனமழை பெய்யக்கூடும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.