சிறையில் இருந்துகொண்டே இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்த செந்தில்பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில், சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை விசாரித்து வரும் அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தது.அவர் கைது செய்யப்பட்டதால் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து அமைச்சரவையில் வைத்திருந்தார்.
ஜாமீனில் வெளிவர செந்தில் பாலாஜி பலமுறை முயன்றும் அவரது ஜாமீன் மனு ஏற்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சிறைக்கு சென்று ஆறு மாதங்களுக்கு மேல் ஆகி விட்ட நிலையில், அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.இதற்கிடையே அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மீண்டும் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.