தமிழக வெற்றி கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், நடிகர் விஜய் கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கினார். எனினும், பாராளுமன்ற தேர்தலை தவிர்த்துவிட்டு 2026 சட்டமன்றத் தேர்தலில் களமிறங்க உள்ளதாக அறிவித்தார்.
இதன் பின்னர் கட்சியை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று கட்சியினருடன் விவாதம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அப்போது கட்சியினருக்கான ஐந்து உறுதிமொழிகளை வழங்கியதாகவும் தெரிகிறது. இதுதான் தற்போது விஜய் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐந்து உறுதிமொழிகள் பின்வருமாறு:-
நாட்டின் விடுதலைக்காகவும், நம் மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர்நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
நமது அன்னை தமிழ்மொழியை காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடனும் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லிணக்கம், சமத்துவை ஆகியவற்றை பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராக செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமையாற்றுவேன் என்று உறுதி அளிக்கிறேன்.
சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளை களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்.இந்த உறுதிமொழியை கட்சியினர் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும் என அப்போது வலியுறுத்தியுள்ளார்.