தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் கார் பந்தயம் நடத்த நான் தான் காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அப்படத்தைத் தொடர்ந்து டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், யூடியுபர் ஒருவர், அண்மையில் நிவேதா பெத்துராஜ் குறித்து அவதூறாக பேட்டியளித்திருந்தார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் குறித்து எக்ஸ் தளத்தில் நிவேதா பெத்துராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், தனக்காக ஏகப்பட்ட பணம் செலவு செய்யப்படுவதாக பொய் பேசுவர்கள், ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்யும் முன்பு அந்த தகவலை சரிபார்ப்பார்கள் என நினைத்து அமைதியாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
2002 ஆம் ஆண்டு முதல் தனது குடும்பம் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும், 16 வயதிலிருந்தே பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திரையுலகிலும் தனக்கு பட வாய்ப்புகளை தரும்படியோ யாரிடமும் கேட்டதில்லை என்றும், தான் எப்போதும் பணத்திற்காக பேராசை கொண்டதில்லை என்றும் கூறியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் கார் பந்தயம் தனது விருப்பமாக இருப்பதாக கூறியுள்ள நிவேதா, உண்மையில் சென்னையில் கார் பந்தயம் நடத்தப்பட இருப்பது குறித்தும் தனக்கு தெரியாது என விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து கண்ணியமான மற்றும் அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாகவும், தன் மீது அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.