கரூரில் பெண் நடன கலைஞரை பாலியல் ரீதியாக சித்ரவரை செய்த குற்றச்சாட்டில் திமுக நிர்வாகி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் பெண் நடன கலைஞரை நடனம் ஆடுவதற்காக அழைத்துச் சென்று தனியறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக சித்ரவதை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 28 வயதான பெண் கடந்த 5 ஆண்டுகளாக மேடை நடன கலைஞராக இருந்து வருகிறார். நடனம் ஆடுவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் அவர் சென்று வந்து கொண்டிருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரூர் தொழில் பேட்டை பகுதியை சேர்ந்த திமுகவைச் சார்ந்த மதி என்பவர் தனது நடன குழுவில் ஆடுவதற்காக அந்த பெண்ணை கரூருக்கு அழைத்து வந்துள்ளார். கரூர் வந்த பெண், மதியிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலேஷ் என்பவரை காதலித்து அவரையே திருமணம் செய்து கொண்டார். அந்த திருமண நிகழ்வு மதிக்குப் பிடிக்கவில்லை. தன் கட்டுப்பட்டில் இருந்த பெண் தனது கார் டிரைவரையே திருமணம் செய்து கொண்டதால் கடும் ஆத்திரம் அடைந்தார்.இதனிடையே அந்த பெண்ணும் நிலேஷும் வேறு மாவட்டத்திற்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரம் தலைக்கேறிய மதி, அந்த தம்பதியைத் தேடிச் சென்று, கடந்த மார்ச் 17ஆம் தேதி கண்டு பிடித்தார். பின்னர் அவர்களிடம் அன்பாக பேசி மீண்டும் கணவன் மனைவி இருவரும் தனது குழுவில் வந்து நடனமாட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவர்களும் அதற்கு சம்மதிக்க இருவரையும் கரூர் அழைத்து வந்தார். கரூர் வந்த பிறகுதான் மதி தனது சுயரூபத்தை காட்டத் தொடங்கினார். கணவன் – மனைவி இருவரையும் வெவ்வேறு இடங்களில் தனி தனியாக அடைத்து வைத்து இருவரையும் தனித்தனியாக சித்திரவதை செய்ய ஆரம்பித்தார். அந்த பெண் நகைகளை திருடி விட்டதாக கூறி தனி இடத்தில் அடைத்து வைத்து அவரது ஆடைகளைக் கலைந்து நிர்வாணமாக வீடியோ எடுத்து அடித்து மிரட்டினார். மதியும் அவருடன் இருந்த சிலரும் அந்த பெண்ணை சொல்ல முடியாத அளவிற்கு அடித்து காயப்படுத்தி துன்புறுத்தினர்.தொடர்ந்து மூன்று நாட்களாக தனி அறையில் அடைத்து வைத்து அந்த பெண்ணை அடித்து உதைத்து, பாலியல் சித்தரவதை செய்துள்ளனர். கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மயங்கி நிலையில் அங்கேயே கிடந்தார். பின்னர், அங்கிருந்த மற்றொரு நடன கலைஞரான ஒரு பெண்மணி, அந்த கொடுமையை கண்டு சகித்துக் கொள்ள முடியாமல் ரகசியமாக பெண்ணின் தாயாரை செல்போனில் தொடர்பு கொண்டு நடந்த சித்ரவதைகளை கூறினார். உங்கள் மகளை தயவு செய்து அழைத்துச் சென்று விடுங்கள். இல்லையென்றால் இவர்கள் அடித்தே கொன்று விடுவார்கள் எனக் கூறி கண்ணீர் விட்டுள்ளார்இதைக் கேட்டு பதறிப் போன அந்த பெண்ணின் தாயார் உடனே கரூர் பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், கரூர் தொழில்பேட்டையில் உள்ள மதியின் நடன கலைஞர்கள் பயிற்சி கூடத்திற்கு விரைந்தனர். அங்கு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணையும், அவரது கணவரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதித்தனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு தன்னை பாலியல் ரீதியாக, மதி உள்ளிட்டோர் துன்புறுத்தியதாக வேதனையுடன் கூறினார். தன்னை போன்று பல பெண்களை நடனம் ஆடுவதற்காக அழைத்து வந்து அறைகளில் பூட்டி வைத்து மதி சித்ரவதை செய்து வருகிறார் என்றும், அவரை கைது செய்து மற்ற பெண்களையும் மீட்க வேண்டும் எனறும் வேண்டுகோள் விடுத்தார்.புகாரின் பேரில் மதி உட்பட 3 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி, பெண் வன்கொடுமை தடுப்புச்சட்டம். சிறை பிடித்து வைத்தல், கொலை மிரட்டல், காயம் ஏற்படும் விதமாக தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களால் எத்தனை பெண் நடன கலைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் என்ன? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.