PMK Candidate: சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் என கனவு காணுகிறார்கள் என மயிலாடுதுறை பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை: நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் வகுப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிடுவதாக அறிவித்து, வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் கடலூர் தொகுதியில் இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், தருமபுரி தொகுதியில் செளமியா அன்புமணி, மயிலாடுதுறை தொகுதியில் ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் ம.க.ஸ்டாலின், சேலத்தில் அண்ணாதுரை உள்ளிட்ட 10 நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நபர்கள், பாமக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், மயிலாடுதுறையில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ம.க.ஸ்டாலின், ஆதரவு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று கும்பகோணத்தில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு நேரில் வந்து, அங்குள்ள பாஜக நிர்வாகிகளுடன் சிறிது நேரம் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து, நிகழ்ச்சி மேடையில் அவர் பேசியதாவது, “எனது தந்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதால், என்னுடைய வாழ்க்கையே போராட்டம் என்ற ரீதியில் தொடங்கியது.
பிரதமர் மோடி 3வது முறையாக மீண்டும் அரியணை ஏறச் செய்ய வேண்டும். சிலர் 100 ரூபாய், 200 ரூபாய் கொடுத்து வெற்றி பெற்று விடலாம் எனக கனவு காணுகிறார்கள். இந்த மயிலாடுதுறையில் நான் போட்டியிடவில்லை, மாறாக இந்தியாவில் உள்ள 543 தொகுதிகளிலும் பிரதமர் மோடிதான் போட்டியிடுகிறார் என எண்ணி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும்” என தெரிவித்தார்.