உங்கள் வீட்டில் மட்டன் வாங்கியிருந்தால் ஒருமுறை கொங்குநாட்டு ஸ்டைலில் மட்டன் தண்ணி குழம்பு செஞ்சு பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் திரும்ப திரும்ப செய்து கொடுக்க சொல்வார்கள்.
மட்டன் தண்ணி குழம்பு கொங்குநாடு பகுதியில் குறிப்பாக ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் பிரபலமான குழம்பு ஆகும். இதை நீங்கள் இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் சுவையே அலாதி தான்.
கொங்குநாட்டு ஸ்டைலில் சுவையான மட்டன் தண்ணி குழம்பை எளிய செய்முறையில் எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.
செய்முறை :
அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை மற்றும் கிராம்பு போட்டு கொள்ளுங்கள்.
பின்னர் அதில் முழு சின்ன வெங்காயம், பூண்டு பல், சிறிய இஞ்சி துண்டு, சீரகம், மிளகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள்.
அனைத்தும் பொன்னிறமாக வதங்கியவுடன் மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் போட்டு ஒரு நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து கொள்ளவும்.
வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் குக்கர் ஒன்றை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அலசி வைத்துள்ள மட்டன், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளுங்கள்.
மட்டனில் இருந்து வரும் தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றி மட்டன் ஓரளவிற்கு நிறம் மாறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.
ஒரு கொதி வந்தவுடன் இதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலந்துவிட்டு குக்கரை மூடி 5 விசில் வரும் வரை விட்டு அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் பிரஷர் தானாக அடங்கியவுடன் மூடியை திருந்து பார்த்தால் எண்ணெய் பிரிந்து மட்டன் நன்றாக வெந்திருக்கும்.
தற்போது அடுப்பில் சிறிய கடாய் ஒன்றை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
இந்த தாளிப்பை மட்டன் குழம்பில் போட்டு கிளறி ஒரு கொத்தி வந்தவுடன் இறக்கினால் சுவையான மட்டன் தண்ணி குழம்பு ரெடி…