தனது 90 விநாடி பேச்சு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் தலைவர்கள் தீவிர பரப்புரையில் உள்ளனர். ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் சொத்துகள் மற்றும் தங்கத்தை கணக்கெடுத்து, அவற்றை நாட்டில் ஊடுருவியவர்களுக்கு பகிர்ந்தளிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக கூறினார்.
இஸ்லாமியர்களை குறிப்பிட்டு அவர் பேசியது சர்ச்சையான நிலையில், நேற்று ராஜஸ்தானின் டோங்க் நகரில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் மீண்டும் அதை சுட்டிக்காட்டி பேசினார். தனது 90 விநாடி பேச்சால் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் அச்சமடைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய பிரதமர் அரசியல் சாசனத்துடன் காங்கிரஸ் கட்சி விளையாடுவதாக குற்றம்சாட்டினார். பட்டியலின மக்களுக்கு அம்பேத்கர் அளித்த இடஒதுக்கீடு உரிமையை, வாக்கு வங்கிக்காக, இஸ்லாமியர்களுக்கு வழங்க காங்கிரஸ் விரும்புவதாகவும் கூறினார். மேலும், இடஒதுக்கீடு எப்போதும் மாற்றப்படாது எனவும், மதத்தின் அடிப்படையில் பிரிக்கப்படாது எனவும் பிரதமர் விளக்கம் அளித்தார்.