C Vijayabaskar Resigns: முன்னாள் அமைச்சரும், அதிமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான விஜயபாஸ்கர் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
C Vijayabaskar Resigns: அதிமுக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான எம்எல்ஏ விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்ட அதிமுக-வின் தூணாக திகழ்பவர். அதிமுக-வில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் வலுவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமலே இருந்து வந்தார்.
விஜயபாஸ்கர் ராஜினாமா:
கடந்த சில நாட்களாகவே இவர் கட்சியில் இருந்து விலக உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது விராலிமலை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.
காலியான அதிமுக கூடாரம்:
இதுதொடர்பாக, சட்டமன்ற பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சட்டமன்ற பேரவை விதி 21-ன்படி விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் தனது பதவி விலகல் கடிதத்தை தம் கைப்பட எழுதி என்னிடம் அளித்துள்ளார். அவர் அளித்த பதவி விலகல் கடிதம் சட்டமன்ற பேரவை விதி 22-ன் படி முறையாக உள்ளதால் அதனை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளுக்கு அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மிகப்பெரிய மோதல் உண்டானது. இதையடுத்து, மதுராந்தகம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் தாராபுரம் ஆகிய நான்கு தொகுதிகளிலும் அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தனர். இது அதிமுக-வினர் மத்தியில் கொந்தளிப்பை உண்டாக்கியது.
விரைவில் இடைத்தேர்தல்:
தற்போது அதிமுக-வின் தூணான விஜயபாஸ்கரும் விலகியிருப்பது அதிமுக-விற்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கியுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் மேலே கூறிய 4 தொகுதிகள் முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு மற்றும் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்துள்ள விராலிமலை ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள விஜயபாஸ்கர் தவெக-வில் இணைவாரா? அல்லது திமுக-வில் இணைவாரா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதில் இன்று அல்லது நாளை தெரிய வரும். விஜயபாஸ்கரும் ராஜினாமா செய்துள்ள நிலையில், தற்போது அதிமுக-வின் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 42 ஆக குறைந்துள்ளது.
சிவி சண்முகம் முடிவு என்ன?
இவர்கள் மட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியுடன் முரண்பட்ட போக்கில் உள்ள முன்னாள் அமைச்சரான சிவி சண்முகமும் விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று கருதப்படுகிறது. அதிமுக தற்போது மிகவும் பலவீனமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கும் சூழலில், கட்சியை மீட்டெடுக்க எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.